”ரிக்சாவும்...டீயும் தான் எங்களுக்கு இனி வயிற்றுப்பாடு”- மேகி ஆலை தொழிலாளார்களின் பரிதாப வாழ்க்கை!
ருத்ரப்பூர்: மேகி நூடுல்சிற்கு தடை விதிக்கப்பட்டதால் நெஸ்லே மேகி ஆலையில் வேலை பார்த்த நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தற்போது ரிக்சா இழுத்தும், டீ விற்றும், கட்டிட வேலை செய்தும் பிழைப்பு நடத்துகின்றனர். பலர் ஊரை காலி செய்து விட்டு வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி செல்லும் அவல நிலையில் உள்ளனர்.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக காரீயம் கலக்கப்பட்டிருப்பதாக எழுந்த அடுக்கடுக்கான புகார்களால் நாட்டின் பல மாநிலங்கள் மேகி நூடுல்சிற்கு தடை விதித்தன.
தடையை விலக்கி தாங்கள் இழந்த சந்தை மதிப்பை மீண்டும் பெற நெல்லே இந்தியா நிறுவனம் பல வகைகளிலும் போராடி வருகிறது. இருப்பினும் அது தொடர்பான வழக்கு நீடித்துக்கொண்டே செல்கிறது. 3 மாதங்களாக அடுத்தடுத்து விதிக்கப்பட்ட தடைகள் அந்த ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது.
உத்திர பிரதேசம், பீகார்,ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கானோர் நெஸ்லே ஆலையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். மேகிக்கு விதிக்கப்பட்ட தடையால் இவர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். பிழைப்பிற்கு வழி தெரியாமல் ரிக்சா இழுத்தும், டீ விற்றும், கட்டிட வேலை செய்தும் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். பலர் அதற்கும் வழியில்லாமல் வேறு மாநிலங்களுக்கு பிழைப்பை தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர். சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.