அம்மா, மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானதம்மா: தாய்மார்களை குறி வைக்கும் விளம்பரம்
டெல்லி: மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள மேகி நூடுல்ஸ் விளம்பரம் தாய்மார்களை குறி வைத்து எடுக்கப்படுகிறது.
நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அதற்கு கடந்த ஜூன் மாதம் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மேக் நூடுல்ஸ் சந்தையில் இருந்து வாபஸ் பெறப்பட்டு அழிக்கப்பட்டது. இந்நிலையில் 5 மாத தடைக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை மேகி நூடுல்ஸ் விற்பனை மீண்டும் துவங்கியுள்ளது.
மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்ட 8 மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் விற்பனை துவங்கி அமோகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நெஸ்லே நிறுவனம் டிவியில் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தை ஒளிபரப்பி வருகிறது. தடை விதிக்கப்பட்டதையும், தடை நீங்கி மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்பதையும் தெரிவித்தே விளம்பரம் செய்கிறார்கள்.
பிள்ளைகள் அடம் பிடித்தாலும் தாய்மார்கள் தானே அவர்களுக்கு மேகி நூடுல்ஸ் வாங்கி செய்து கொடுக்க வேண்டும். இதனால் நெஸ்லே நிறுவனம் தாய்மார்களை குறி வைத்து விளம்பரம் செய்து வருகிறது.
இது குறித்து நெஸ்லே இந்தியா ஜெனரல் மேனேஜர் மார்டென் கெரேட்ஸ் கூறுகையில்,
மேகி பாதுகாப்பானது, எப்பொழுதுமே பாதுகாப்பானது என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்பதை தாய்மார்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். மேகி குறித்து வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க விரும்புகிறோம் என்றார்.