'கோமா'வில் இருக்கும் ஜஸ்வந்த் சிங்கிற்காக யாகம் நடத்திய ஆதரவாளர்கள்
டெல்லி: கோமாவில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் குணமடைய அவரது நலம் விரும்பிகள் ஜெய்சல்மரில் உள்ள முக்தீஸ்வரர் மாகேதவ் கோவிலில் யாகம் நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் டெல்லியில் உள்ள தனது வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் கோமாவில் உள்ளார்.
இந்நிலையில் அவர் குணமடைய, நீண்ட ஆயுள் பெற ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள முக்தீஸ்வரர் மகாதேவ் கோவிலில் மகா ம்ரத்யுஞ்சய யாகம் துவங்கப்பட்டது. மேலும் ஜஸ்வந்த் நலமடைய வேண்டி பைசாகி கிராமத்திலும் அவரது நலம் விரும்பிகள் யாகம் நடத்தினர்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் போட்டியிட பாஜக டிக்கெட் கொடுக்காததால் கட்சியை விட்டு வெளியேறிய அவர் சுயேட்சையாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.