அரசியல் கற்றுகொள்ள மகாபாரதம்தான் "பெஸ்ட்"... "ரெஸ்ட்" எடுக்கும் அத்வானி பேச்சு!
டெல்லி: இந்தியாவில் அனைத்து கட்சிகளும் அரசியலை மகாபாரதத்தில் இருந்து கற்று கொள்ளுங்கள் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அண்மையில் பேசுகையில், " பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அத்வானி பேசும்போது ''கற்பித்தல், அரசியல், ஒற்றுமை, துணிச்சல், ஒழுக்கம் ஆகியவற்றைக் கற்றுத் தருவதில் மகாபாரதத்தைவிட ஒரு சிறந்த ஆசான் இருக்க முடியாது. அதனை மக்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.
ஒற்றுமை, நீதி, நேர்மை, நல்லொழுக்கம் மற்றும் அரசியல் தத்துவங்கள் அதில் நிறைய பொதிந்து இருக்கின்றன. மகாபாரதம், ராமாயணம் போன்ற புராணங்களிலிருந்து அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் கிறிஸ்துவ மிஷனரி பள்ளியில்தான் படித்தேன். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் எனது பாட்டி மகாபாரதத்தை படிக்கும்படி அறிவுறுத்தினார். எனக்கு ஆங்கிலமும், தாய்மொழியான சிந்தியும் தான் அப்போது தெரியும்.
அதனால், அந்த மொழிகளில் தான் மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதையை நான் படித்தேன். சுதந்திரம் அடைந்த பிறகே அதை என்னால் ஹிந்தியில் படிக்க முடிந்தது. ஹிந்தி மொழியில் படித்தபோதுதான், அதன் பெருமை எனக்குத் தெரிந்தது" என்றார்.
அத்வானி தற்போது தீவிர அரசியலிருந்து கட்டாய ஓய்வளிக்கப்பட்டு அமைதியாக ஓய்வெடுத்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.