மகதாயி நதிநீர் பிரச்சினை: கர்நாடகாவில் பந்த் முடிந்தது - இயல்பு வாழ்க்கை திரும்பியது
பெங்களூரு: மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் நிறைவடைந்ததை அடுத்து அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் பாயும் மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக மூன்று மாநிலங்கள் இடையே பிரச்சினை நீடிக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள மகதாயி நடுவர் மன்றத்தில் கர்நாடக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அதில் வடகர்நாடகாவில் உள்ள தார்வார், கதக், பெலகாவி, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க மகதாயி நதியில் இருந்து 7.56 டி.எம்.சி நீரை கர்நாடகாவுக்கு அளிக்க வேண்டும். இதை எதிர்க்கும் மகாராஷ்டிரா, கோவா அரசின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என கோரி இருந்தது.
இதை விசாரித்த மகதாயி நடுவர் மன்றம் சில தினங்களுக்கு முன்னர் கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தார்வார், கதக், பெலகாவி, பாகல் கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும்,விவசாயிகளும் 28ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் குதித்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம், கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு, திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் களமிறங்கின.
கர்நாடகா பந்த்
மகதாயி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னடர் அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்ததை அடுத்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
முழு அடைப்பு
இந்த முழுஅடைப்புக்கு கர்நாடக வணிகர் சங்கம், போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.
வட கர்நாடகாவில் பதற்றம்
ஹூப்ளி, கதக், பாகல் கோட்டை உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மத்திய ரிசர்வ் படை போலீஸார் குவிக்கப்பட்டனர். வட கர்நாடகாவில் ஜெகதீஷ் ஷெட்டர், பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் வீடுகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சினிமா படப்பிடிப்பு ரத்து
சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. பெங்களூருவில் கன்னட சங்கங்கள் சார்பில் பெங்களூரு டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் கன்னட திரையுலகினரும் பங்கேற்றனர்.
சாலையில் உருண்டு போராட்டம்
சிக்மகளூரில் விவசாய ஆதரவு அமைப்பினர் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர். மாநிலத்தின் சில இடங்களில் ரயில் மறியலும் நடைபெற்றது. பேருந்துகள் அனைத்து எல்லைகளில் நிறுத்தப்பட்டதால் பெங்களூரு செல்லும் பயணிகள் நடந்தே கர்நாடக எல்லைக்குள் சென்றனர்.
இயல்பு வாழ்க்கை திரும்பியது
காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பந்த் நிறைவடைந்தது. ஒரு சில இடங்களில் நடைபெற்ற போராட்டங்களைத் தவிர பந்த் அமைதியாக நடந்து முடிந்தது. இதனையடுத்து கர்நாடகாவில் இயல்பு நிலை திரும்பியது. பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கின. மூடப்பட்ட கடைகள், திரையரங்குகள் திறக்கப்பட்டன.