வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... கிணற்றில் விழுந்த சிறுத்தை... பைப்பை கவ்வி உயிர் தப்பியது
புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே படிகள் இல்லாத கிணற்றில் தவறிவிழுந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
புனேவின் மேற்குப் பகுதியில் அடர்ந்த காடுகள் உள்ளன. இக்காடுகளில் சிறுத்தை, ஓநாய், கழுதைப் புலி மற்றும் நரி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சிறுத்தை போன்ற மிருகங்கள் அருகில் உள்ள ஊருக்குள் அடிக்கடி மக்களை அச்சுறுத்தி வரும்.
இந்தநிலையில், ஷிரூர் தாலுகாவின் ஃபக்தே கிராமத்தில் உள்ள கிணற்றில், சிறுத்தை ஒன்று பைப்பை கவ்வியவாறு, மிதந்து கொண்டு இருந்தது. இதுகுறித்து, தகவலறிந்து வந்த ஷிரூர் வனத்துறை மீட்புக் குழு மற்றும் வனவிலங்கு எஸ்.ஓ.எஸ். குழுவினர் இணைந்து, சிறுத்தையை சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
சிறுத்தையில் உடலில் காயங்கள் இருந்ததால், சிகிச்சைக்காக ஜுன்னாரில் உள்ள மணிக்டோ சிறுத்தை மீட்பு மையத்திற்கு அந்த சிறுத்தை கொண்டுச் செல்லப்பட்டது. வழி மாறி வந்த சிறுத்தை, இரவில் தவறுதலாக கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் காட்சியை பார்ப்பதற்கு அப்பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். வீடியோ எடுப்பதற்காக செய்தி சேனல்களும் அங்கு வந்தன. கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுத்தையுடன், இளைஞர்கள் சிலர் செல்பி, டிக் டாக் எடுத்து சிரித்துக் கொண்டு இருந்தனர்.