பாஜக அபாரம்.. மகாராஷ்டிரா, ஹரியானாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.. அதிரடி எக்ஸிட் போல் முடிவுகள்
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்துள்ளது. வரும் 24ம் தேதி வியாழக்கிழமை, இரு மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
இந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை முன்னணி டிவி சேனல்கள், முன்னணி ஆய்வு நிறுவனங்களோடு இணைந்து வெளியிட்டு வருகின்றன. மாலை 6.30 மணிக்கு மேல் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
இந்தியா டுடே டிவி-ஆக்ஸிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய, மகாராஷ்டிரா தேர்தல் முடிவு தொடர்பான, எக்ஸிட் போல் முடிவுகளை பாருங்கள்:
மகாராஷ்டிராவில் 109 முதல் 125 தொகுதிகளை பாஜக வெல்லும். பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா 57-70 தொகுதிகளை வெல்லும். காங்கிரஸ் கட்சி, 32-40 தொகுதிகள் வெல்லும். அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி 40 முதல் 50 தொகுதிகளை கைப்பற்றும். ஆக மொத்தம் பாஜக கூட்டணி, 166 தொகுதிகள் முதல் 194 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாம்.
145 தொகுதிகளை வென்றாலே 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பலத்தோடு, ஆட்சியமைக்க முடியும் என்பதால், பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்கிறது இந்த கருத்துக் கணிப்பு. தேசியவாத காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. காங்கிரசுக்கு கடும் அடி விழுந்துள்ளது.
News18 - IPSOS எக்ஸிட் போல் முடிவுகள்படி, மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அதிகப்படியாக 243 தொகுதிகளை வெல்லுமாம். இதன் மூலம், பாஜக கூட்டணிக்கு அமோக வெற்றி காத்திருப்பதாக தெரிவிக்கிறது இந்த எக்ஸிட் போல் முடிவு. காங்கிரஸ் கூட்டணிக்கு 41 தொகுதிகள் மட்டுமே கிடைக்குமாம்.
பிறர் 4 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளது.
அடித்து நொறுக்கும் மோடி - அமித் ஷா இரட்டைகுழல் துப்பாக்கி.. 2 மாநில தேர்தலை வெல்கிறது
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை அள்ளும் என்று டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் தெரிவிக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு 48 தொகுதிகளும், பிறருக்கு 10 தொகுதிகளும் மட்டும் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் கூறியுள்ளது.
ரிபப்ளிக்-ஜன் கிபாத் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில், 223 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 54 தொகுதிகளும், பிறருக்கு 11 தொகுதிகளும் கிடைக்கும் என்கிறது இந்த எக்ஸிட் போல்.
ஏபிபி-சி வோட்டர் எக்ஸிட் போல்: 204 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும், 69 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணியும், 15 தொகுதிகளை பிறரும் வெல்ல வாய்ப்பு.
டிவி 9-சிஐசிஇஆர்ஓ எக்ஸிட் போல்: 197 தொகுதிகளை பாஜக கூட்டணியும், 75 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணியும், 16 தொகுதிகளை பிற கட்சிகளும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
ஹரியானாவை பொறுத்தளவில் அங்கும், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது என்றுதான் எல்லா கருத்துக் கணிப்புகளும் கைகாட்டுகின்றன.
இந்தியா நியூஸ்-போல்ஸ்ஸட்ராட் எக்ஸிட் போல்: மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 75 முதல் 80 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது. காங்கிரஸ் 9-12 தொகுதிகளையும், பிறர் 1 தொகுதியையும் வெல்ல வாய்ப்பு உள்ளது.
News18 - IPSOS எக்ஸிட் போல் முடிவுகள்: பாஜக 75 தொகுதிகள், காங்கிரஸ் 10, பிறர் 5 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது.
டைம்ஸ் நவ்: பாஜக 71, காங்கிரஸ் 11, பிறர் 8 தொகுதிகளை வெல்லுவார்கள்.
நியூஸ் எக்ஸ்: பாஜக 77, காங்கிரஸ் 11, பிறர் 2 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளது.
ரிபப்ளிக்-ஜன்கிபாத்: பாஜக 57 தொகுதிகள், காங்கிரஸ் 17 தொகுதிகள், பிறர் 16 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு.
டிவி9-பாரத்வர்ஷ்: பாஜக 47 தொகுதிகள், காங்கிரஸ் 23 தொகுதிகள், பிறர் 20 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது.
ஏபிபி-சிஓட்டர்: 72 தொகுதிகளை பாஜக வெல்ல வாய்ப்புள்ளது. காங்கிரஸ் 8, பிறர் 10 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது.
பொதுவாக எக்ஸிட் போல் முடிவுகளும், தேர்தல் முடிவுகளும் ஒரே டிரெண்ட்டில்தான் இருக்கும் என்பது வரலாறு. எண்ணிக்கையில் வேண்டுமானால் ஓரளவுக்கு வித்தியாசங்கள் இருக்குமே தவிர, தேர்தல் முடிவுக்கான டிரெண்ட் ஒரே மாதிரிதான் வரும் என்பதால், இந்த எக்ஸிட் போல் முடிவு பாஜக தொண்டர்களும், தலைவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.