இது மாநில தேர்தல் மட்டுமில்லை.. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவு நாட்டுக்கே முக்கியமானது!
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல் முடிவுகள் என்பது, வெறும் அந்த மாநிலத்துக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் என நினைத்து, கடந்து போய்விட முடியாது. மொத்த நாட்டின் நாடித்துடிப்பையும், அந்த இரு மாநில தேர்தல் எதிரொலிக்கும். எப்படி என்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 288. ஒரு நியமன உறுப்பினர் பதவியும் உண்டு. ஹரியானாவில் மொத்த சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 90. ஆக மொத்தம் 2 மாநிலங்களின் மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 378. இதில் பாஜக மட்டும் மகாராஷ்டிராவில் 122 தொகுதிகளை கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கைப்பற்றியது. ஹரியானாவில் 48 தொகுதிகள் பாஜக வசம் உள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகிய இருவருமே, யாருமே எதிர்பார்க்காத தேர்வுகள் ஆகும். வழக்கமான, மாநிலத்தின் பெரும்பான்மை ஜாதி அடிப்படையிலான முதல்வர் தேர்வு நடைபெறும். அதை தவிர்த்துவிட்டு பாஜக மேலிடம் துணிந்து எடுத்த முடிவின் விளைவாக, முதல்வர் ஆனவர்கள் இவர்கள் இருவரும். எனவே இந்தத் தேர்வு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா, என்பதை அறிந்துகொள்ள இந்த சட்டசபை தேர்தல் முடிவு தான் ஒரு பாராமீட்டராக இருக்கப் போகிறது.
விக்கிரவாண்டியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்கிறது.. திமுக தேர்தல் ஆணையத்தில் அதிரடி புகார்!
காஷ்மீர்
மற்றொரு முக்கியமான விஷயம் என்றால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370வது சட்டப் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு நடைபெறக்கூடிய முதலாவது சட்ட மன்ற தேர்தல்கள் இவை. பாஜக தனது தேர்தல் அறிக்கையின் போதே, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். எனவே காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா என்பதற்கான அளவுகோலாக இந்த தேர்தல்களை பார்க்க முடியும்.
எதிர்க்கட்சிகள் நிலை
லோக்சபா தேர்தலில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற பிறகு நடைபெறக் கூடிய முதலாவது சட்ட சபைத் தேர்தல்கள் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில தேர்தல்கள்தான். பாஜக அதே பலத்துடன் தான் இன்னமும் இருக்கிறதா? மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்திற்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து உள்ளார்களா என்பதை அறிந்துகொள்ள இந்த தேர்தல் முடிவுகள் உதவும், என்பதோடு, லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையை மேம்படுத்திக் கொண்டு உள்ளனவா? அல்லது முன்பைவிட பலவீனமாகி விட்டதா என்பதை அறிந்து கொள்ளவும் இந்த தேர்தல் முடிவுகள் உதவும்.
முத்தலாக் சட்டம்
2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, பாஜக முஸ்லீம் வாக்காளர்களிடம் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது இல்லை. இன்னும் சொல்லப்போனால் குறிப்பிட்ட சதவீத முஸ்லிம்கள் குஜராத் கலவரத்திற்கு பிறகு பாஜக மீது கோபத்தில் இருந்தனர். ஆனால் முத்தலாக் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றிய பிறகு கணிசமான முஸ்லிம் வாக்காளர்கள்.. அதிலும் பெண்கள்.. பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள். உண்மையிலேயே முஸ்லிம்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதா என்பதை அறிந்துகொள்ள, முத்தலாக் சட்டத்திற்கு எதிராக நடைபெறக் கூடிய முதலாவது சட்டமன்ற தேர்தல்களான, இவற்றின் ரிசல்ட், நாடி கணிப்பு அறிய உதவும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பொருளாதார மந்தம்
மற்றொரு முக்கியமான விஷயம், நாட்டின் பொருளாதாரம் பெரும் மந்த நிலையை அடைந்த பிறகு நடைபெறக் கூடிய முதலாவது சட்டசபை தேர்தல்கள் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்கள்தான். விவசாயம், உற்பத்தித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சமீபமாக வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்த இரு துறைகளும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஜீவநாடி. எனவே, பொருளாதார மந்தநிலையால், மத்திய அரசு மீது, மக்கள் அதிருப்தியில் உள்ளார்களா, இல்லையா என்பதை அறிந்துகொள்ள இந்த தேர்தல் முடிவுகள் உதவக்கூடும். ஒட்டுமொத்தமாக தேசத்தின், நாடித்துடிப்பை அறிய, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் உதவும் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.