மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் மோடி! முதல்வர் பட்னவிஸ்க்கு புகழாரம்!
Recommended Video
நாசிக்: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நாசிக்கில் இன்று பிரதமர் மோடி தொடங்கினார். அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இளைஞர்களின் அடையாளமாக திகழ்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர் மோடி.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தமது முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆளும் பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளது.
இந்நிலையில் நாசிக்கில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: சட்டசபையில் பெரும்பான்மை பலம் இல்லாத போதும் நிலையான ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ். 4,000 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் பட்னவிஸ்.
முதல்வர் பட்னவிஸ், இளைஞர்களின் அடையாள சின்னமாக திகழ்கிறார். தேவேந்திர பட்னவிஸ் மீண்டும் முதல்வராக நாற்காலியில் அமர மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் கனவுகளை பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சி சிதைத்துக் கொண்டிருந்தது.
PM in Nashik, Maharashtra: We had promised that we will make new efforts to curb the problems in Jammu and Kashmir & Ladakh. Today I can say with satisfaction that the country has started walking towards fulfilling those dreams. #Article370 pic.twitter.com/DWYUlrJMSK
— ANI (@ANI) September 19, 2019
தற்போது 370-வது பிரிவை ரத்து செய்து அம்மாநிலத்தில் புதிய சொர்க்கத்தை உருவாக்க இருக்கிறோம். ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கம் என்பதும் இந்திய அரசியல் சாசனத்தை முழுமையாக அமல்படுத்தியது என்பதும் மத்திய அரசின் தனிப்பட்ட முடிவு அல்ல. ஒட்டுமொத்த நாட்டு மக்களின் முடிவு. அதைத்தான் நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.