20 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை.. அரசியல் சாணக்கியருக்கு இந்த நிலையா?.. சறுக்கும் சரத் பவார்!
நடந்து முடிந்துள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மிக மோசமான சரிவை சந்திக்கும் என்று தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கிறது.
Recommended Video
மும்பை: நடந்து முடிந்துள்ள மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மிக மோசமான சரிவை சந்திக்கும் என்று தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கிறது.
நேற்று இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. இதில் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாக மகாராஷ்டிரா தேர்தல் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியானது.
அடித்து நொறுக்கும் மோடி - அமித் ஷா இரட்டைகுழல் துப்பாக்கி.. 2 மாநில தேர்தலை வெல்கிறது
நிலை என்ன
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி மகாராஷ்டிராவில் பாஜக மாபெரும் வெற்றியை ருசிக்க இருக்கிறது. 288 இடங்களில் பாஜக - சிவசேனா கூட்டணி 230+ இடங்களை வெல்ல போகிறது. இதில் பாஜக மட்டுமே தனித்து 148 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
காங்கிரஸ் கூட்டணி
அதே சமயம் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 44 இடங்களை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆம் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 40+ இடங்களை மட்டுமே வெல்லும். இதில் தேசியவாத காங்கிரஸ் 20 இடங்களை, அல்லது அதை விட குறைந்த இடங்களை வெல்லும் என்கிறார்கள்.
தேசியவாத காங்கிரஸ் எப்படி
இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது என்கிறார்கள். கட்சி தொடங்கி 20 வருடத்தில் இவ்வளவு குறைவான இடங்களில் தேசியவாத காங்கிரஸ் வென்றது கிடையாது.
இதுவரை இல்லை
இந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக இருக்க போகிறது என்கிறார்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 147 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களிலும் போட்டியிட்டது.
வரலாறு எப்படி
124 இடங்களில் கிட்டத்தட்ட 100+ இடங்களில் தேசியவாத காங்கிரஸ் தோல்வி அடைய போகிறது என்று கணிப்புகள் தெரிவிக்கிறது. 1999ல் தொடங்கி இன்று வரை 20 வருடத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இவ்வளவு மோசமான தேர்தலை சந்தித்தது கிடையாது. மகாராஷ்டிராவின் தனிப்பெரும் தலைவராக வலம் வந்தவர் சரத்பவார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறை
காங்கிரஸ் கட்சியிடம் பிரிந்து 1999ல் தேசியவாத காங்கிரஸ் தொடங்கப்பட்டது. அப்போதில் இருந்தே மகாராஷ்டிராவில் அக்கட்சி மிகவும் வலுவான கட்சியாக இருந்துள்ளது. எல்லாவிதமான அரசியல் மாற்றங்களையும் சமாளித்து அக்கட்சியை வேகமாக சரத்பவார் வளர்த்தெடுத்தார்.
சரத் பவார் சறுக்கல்
இதுவரை போட்டியிட்ட எந்த சட்டசபை தேர்தலிலும் தேசியவாத காங்கிரஸ் 40 இடங்களுக்கும் குறைவாக வென்றது கிடையாது. மோடி அலை இருந்த போது கூட 2014ல் சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 41 இடங்களில் வென்றது. இந்தமுறை அதைவிட குறைவான இடங்களில் வெல்லும் என்கிறார்கள்.
மாநில கட்சியின் நிலை
தேசிய அளவில் வலுவான மாநில கட்சிகளாக திமுக, அதிமுக, திரிணாமுல் கட்சிகளுக்கு அடுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் இருந்தது. அதன் தலைவர் சரத்பவார் மிகவும் வலுவான அரசியல் சாணக்கியராக பார்க்கப்பட்டார். ஆனால் அவரின் கட்சி இந்த தேர்தலில் மோசமான தோல்வியை சந்திக்கும் என்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.