மகாராஷ்டிராவில் அழியப் போகும் சிவசேனா.. "பங்காளியுடன்" கை கோர்ப்பாரா உத்தவ் தாக்கரே?
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கியக் கட்சியான சிவசேனா பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. வரும் சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி படு தோல்வியைச் சந்திக்கும் என்று பேசப்படுகிறது. இதனால் அழிவைச் சந்திக்க தனது வைரிக் கட்சியான மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கேரவுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கை கோர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒன்இந்தியா இதுதொடர்பாக நடத்திய சர்வேயில், வரும் சட்டசபைத் தேர்தலில் சிவசேனாவுக்கு பெரும் சரிவு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
ராஜ் தாக்கரேவுடன், உத்தவ் தாக்கரே இணைந்து தேர்தலைச் சந்தித்தால்தான் இந்த அழிவைத் தடுக்க முடியும் என்ற நிலை இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இரு தாக்கரேக்களும் இணைவார்களா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
பிரிந்த சக்திகள்
ஒரு காலத்தில் பால் தாக்கரேவின் வலது கரமாகவும், இடது கரமாகவும் இருந்தவர்கள் இந்த ராஜ் தாக்கரேவும், உத்தவ் தாக்கரேவும். இதில் உத்தவ் தாக்கரே, பால் தாக்கரேவின் மகன் ஆவார். ஆனால் சிவசேனாவின் அடுத்த வாரிசாக ஆரம்பம் முதலே அறியப்பட்டவர் ராஜ் தாக்கரேதான். ஆனால் கடைசி நேரத்தில் மகனை பால் தாக்கரே முன்னிறுத்தியதால் சிவசேனாவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்டவர் ராஜ் தாக்கரே.
பாஜகவின் மிரட்டல்
கடந்த 25 வருடமாக சிவசேனாவும், பாஜகவும் இணைந்தே செயல்பட்டு வருகின்றன. ஆனால் இப்போது இந்தக் கூட்டணிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சிவசேனாவின் ஆதிக்கத்தைப் பொறுத்துக் கொண்டது போதும், வரும் தேர்தல தனியாக சந்திப்போம் என்று பாஜகவினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். சிவசேனாவை உதறி விடவும் அவர்கள் தயாராகி விட்டனர். இது சிவசேனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
நடுவில் புகுந்து பலன் அடையப் பார்க்கும் காங்கிரஸ்
இதைப் பயன்படுத்திக் கொண்டு நடுவில் புகுந்து லாபம் அடைய காங்கிரஸ் கண்டிப்பாக முயற்சிக்கும். அப்படி நடந்தால் அதிகம் அடி வாங்குவது சிவசேனாவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
கூட்டம் வருது.. ஓட்டு வருமா...
உத்தவ் தாக்கரேவின் கூட்டங்களுக்கு பெருமளவில் கூட்டம் வரத்தான் செய்கிறது. ஆனால் அத அப்படியே அவர் ஓட்டாக பெறுவாரா என்பதுதான் பெரும் கேள்விக்குறியாகும்.
பயத்தால் கூடும் கூட்டம்
சிவசேனாவுக்கு வரும் கூட்டமெல்லாம் அக்கட்சியினர் மீதான அச்சம் காரணமாக கூடும் கூட்டம் என்கிறார்கள். மாறாக, அரசியல் ஆதரவாக இது மாற வாய்ப்பில்லை.
இரு தாக்கரேக்களும் இணைய ஆதரவு
அதேசமயம், ஒன்இந்தியா எடுத்த ஆய்வில், இரு தாக்கரேக்களும் கை கோர்த்து, இரு கட்சிகளும் இணைந்து தேர்தலைச் சந்திக்க மக்களிடையே ஆதரவு காணப்படுகிறது.
75 சதவீதம் பேர் ஆதரவு
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதம் பேர் இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் பேர் மட்டுமே தனித் தனியாக செயல்பட ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இணைந்தால் ஆதரவு
இரு கட்சிகளும் தேர்தலுக்கு முன்பே இணைந்தால் சிவசேனா மீது உள்ள பழைய பாசம் காரணமாக அக்கட்சி ஆதரிப்போம் என்று கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.
கடந்த தேர்தலில் பலத்த அடி
உட்கட்சிக் குழப்பம், வாரிசுப் போர் காரணமாக முந்தைய தேர்தல்கள் பலவற்றில் சிவசேனாவும் சரி, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவும் சரி பலத்த அடியைச் சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இணைந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம்
ஆனால் குடும்பப் பிரச்சினை, ஈகோ உள்ளிட்டவற்றை விட்டு விட்டு இருவரும் இணைந்து மகாராஷ்டிராவின் நலனையே பிரதானமாக கொண்டு செயல்பட்டால் சிவசேனாவால் ஆட்சியைப் பிடிக்கக் கூடிய அளவுக்கு உயரும் வாய்ப்பு கிடைக்குமாம்.
உத்தவ் பேச்சு
ஆனால் சமீபத்தில் உத்தவ் தாக்கரே பேசுகையில், கட்சியிலிருந்து விலகிப் போனவர்களை மீண்டும் சேர்க்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.
நான்தான் முதல்வர்
கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிர தேர்தலை மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா சந்திக்கும் என்றும் முதல்வர் வேட்பாளர் ராஜ் தாக்கரே என்றும் அக்கட்சி அறிவித்தது. இதைத் தொடர்ந்து சிவசேனாவும், உத்தவ் தாக்கரேவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது.
நடுவில் புகுந்த ஆதித்ய தாக்கரே
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவின் மகனும், சிவசேனாவின் இளைஞர் அணித் தலவருமான ஆதித்ய தாக்கரே மிஷன் 150 என்ற திட்டத்தை அறிவித்தார். வரும் சட்டசபைத் தேர்தலின்போது இளைஞர்கள், மாணவர்களை சிவசேனாவுக்கு ஆதரவாக திருப்பும் திட்டமாகும் இது.
மொத்தத்தில் இரு தாக்கரேக்களும் தங்களது ஈகோவை விட்டால்தான் ஆச்சு.. இல்லாவிட்டால் சிவசேனாவுக்கு அழிவு நிச்சயம் என்பது கண் கூடாகும்.