மகா.. சபாநாயகர் போட்டியிலிருந்து பாஜக விலகல்..காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்
மகாராஷ்டிரா சபாநாயகர் பதவிக்கான போட்டியிலிருந்து பாஜக விலகி உள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா சபாநாயகர் பதவிக்கான போட்டியிலிருந்து பாஜக விலகி உள்ளது. பாஜக வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோல் போட்டியின்றி தேர்வாகிறார்.
மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் மகாராஷ்டிராவின் 18வது முதல்வராவார். நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இவர் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
சிவசேனாவின் கூட்டணிக்கு 169 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். அம்மாநில சட்டசபை தற்காலிக சபாநாயகராக என்சிபி எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தத்தின்படி காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்படும்.
அதே சமயம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும். இந்த நிலையில் மகாராஷ்டிராவின் சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோல் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பல வருடங்களாக பாஜகவில் இவர் இருந்துள்ளார். 2014ல் இவர் பாஜகவில் இருந்து போட்டியிட்டு லோக்சபா எம்பியாக தேர்வானார்.
இந்த நிலையில் திடீர் என்று மகாராஷ்டிரா சபாநாயகர் பதவிக்கான போட்டியிலிருந்து பாஜக விலகி உள்ளது. பாஜக வேட்பாளர் கிஷான் கத்தோர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் காங்கிரஸ் கட்சியின் நானா பாட்டோல் போட்டியின்றி தேர்வாகிறார்.
இவர் பாஜக கட்சியில் இருந்து விலகி கடந்த வருடம்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால் இவர் லோக்சபா தேர்தலில் நிற்காமல் சட்டசபை தேர்தலில் நின்று சகோலி தொகுதியில் நின்று வென்றார். பாஜகவில் இணைவதற்கு முன் காங்கிரஸ் கட்சி சார்பாக இவர் 4 முறை சகோலி தொகுதியில் வென்றார்.
தற்போது இவர் சபாநாயகராக்கப்பட உள்ளார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இன்னும் துணை முதல்வரை தேர்வு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.