திருப்பதியில் பக்தரிடம் இருந்து மீண்டும் துப்பாக்கி பறிமுதல்- சோதனை தீவிரம்
திருப்பதியில் பக்தர் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியை ஆந்திரா மாநில போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி: திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் மகராஷ்டிரா மாநில இளைஞரிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். பக்தர் போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனரா என்று போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பாதுகாப்பு நலன் கருதி, திருப்பதிக்கு வரும் பக்தர்களையும் அவர்களது உடைமைகளையும் போலீஸார் சோதனை செய்வது வழக்கம்.
அதன்படி இன்று அலிபிரி சோதனை சாவடியில் போலீஸார் வழக்கம் போல் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது இளைஞர் ஒருவரிடம் துப்பாக்கியும், தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவரிடம் துப்பாக்கி கொண்டு வந்ததற்கான காரணத்தை கேட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல சென்ற 2ம் தேதி காரில் திருப்பதி வந்த மகாராஷ்டிரா மாநில பக்தரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இப்போது மீண்டும் ஒருவர் துப்பாக்கியோடு சிக்கியுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் அடுத்த மாதம் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருமலை, திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் அசம்பாவித சம்பவங்களை அரங்கேற்றும் வகையில் யாரும் ஊடுருவி உள்ளார்களா என்று ஆந்திரா மாநில காவல்துறை அதிகாரிகள் திருப்பதியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.