கலாம் பிறந்த அக்டோபர் 15 ஆம் தேதி ‘வாசிப்பு தினமாக' கொண்டாடப்படும்.. மகாராஷ்ட்ர அரசு அறிவிப்பு
மும்பை : மறைந்த அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதியை வாசிப்பு தினமாக கொண்டாடப்படும் என்று மகராஷ்ட்ர அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு நாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.
இந்நிலையில் மறைந்த மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை, பீகாரில் உள்ள கிஷான்கஞ்ச் வேளாண் கல்லூரிக்கு சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்து ஏற்கனவே அறிவித்துவிட்டது..
மகாராஷ்ட்ர அரசும் அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ந்தேதியை ‘வாசிப்பு தினமாக' கொண்டாட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து பேசிய மகாராஷ்ட்ர மாநில கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே, ‘இந்தியாவின் தலைசிறந்த மாமனிதர் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான அக்டோபர் 15-ந்தேதியை ஆண்டுதோறும் வாசிப்பு தினமாக மராட்டிய பள்ளிகளில் கொண்டாடப்படும்' என தெரிவித்தார்.
அப்துல் கலாம் பிறந்த மண்ணை தன்னில் அடக்கிய தமிழக அரசும் அவரை பெருமைப் படுத்தும் வகையிலான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.