மிஸோரமுக்குப் போக மாட்டேன்.. மகாராஷ்டிர ஆளுநர் சங்கரநாராயணன் அதிரடி ராஜினாமா
மும்பை/ கொச்சி: மிஸோரமுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட மகாராஷ்டிர மாநில ஆளுநர், கே. சங்கரநாராயணன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய மாநில ஆளுநர் பொறுப்பை ஏற்க முடியாது என்றும் அவர் அறிவித்துள்ளார். இடமாற்றத்தை ஏற்க முடியாது என்றம அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இடமாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வமான உத்தரவு எனக்கு வரவில்லை. ஆனால் அவமானத்துடன் நான் ஆளுநர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன். என்னை இடமாற்றம் செய்தால் அதை நான் ஏற்க மாட்டேன். ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார் சங்கரநாராயணன்.
முன்னதாக நேற்று நள்ளிரவில் சங்கரநாராயணன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை மிஸோரம் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை உத்தரவிட்டது. முன்னதாக மத்திய அரசின் நெருக்குதலை ஏற்று ராஜினாமா செய்ய மறுத்து விட்டார் சங்கரநாராயணன். இதையடுத்து அவரை மிஸோரமுக்கு இடமாற்றம் செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்தது. அதன் பேரில் அவரை குடியரசுத் தலைவர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
2017ம் ஆண்டு வரை சங்கரநாராயணனுக்குப் பதவிக்காலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனது இடமாற்றத்தை எதிர்த்து கோர்ட்டுக்குப் போகப் போவதில்லை என்றும் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மத்திய அரசு பதவியில் இருந்தபோது முதலில் நாகாலாந்துக்கும், பின்னர் ஜார்க்கண்ட்டுக்கும், கடைசியாக மகாராஷ்டிராவுக்கும் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் சங்கரநாராயணன்.