கார் விபத்து வழக்கில் சல்மான் கான் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு மேல்முறையீடு
மும்பை: கார் விபத்து வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றியதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த மே மாதம் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வெறும் சந்தேகத்தின்பேரில் சல்மான் கானுக்கு தண்டனை அளிக்க முடியாது என்று கூறி அவரை அந்த வழக்கில் இருந்து விடுவித்து இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.