விடாத பதவி ஆசை.. மோதி கொள்ளும் தலைவர்கள்.. பிரியும் குடும்பங்கள்.. மகாராஷ்டிராவும் தப்பவில்லை..!
Recommended Video
சென்னை: குடும்ப அரசியலில் பெரும்பாலான மாநிலங்கள் இன்று சிக்கி உள்ளன.. இதற்கு என்ன காரணம்? இந்நிலை மாறுமா? மாறாதா? என்ற கேள்வி அன்று முதல் இன்றைய மகாராஷ்டிரா அரசியல் வரை மக்களுக்கு எழுகிறது.
குடும்ப அரசியலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான். அன்று காங்கிரஸ் போட்ட பாதையில்தான் பல மாநிலக் கட்சிகளும் வரிசையாக பயணிக்கத் தொடங்கின... இன்றும் பயணித்து வருகின்றன. ஆனால், பதவி, புகழுக்காக சொந்த உறவுகளுக்குள்ளேயே வேட்டு வைத்து கொள்வதும், ஆப்பு வைத்து கொள்வதும் வெகு சகஜமாக மாறிவிட்ட ஒன்று! அது இன்றைய நாளிலும் மகாராஷ்டிரா மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு வருகிறது!
தாய் - பிள்ளை, அண்ணன் - தம்பி, அப்பா - மகன் என்ற ரத்த பந்தங்களாகட்டும், அல்லது வெளியில் இருந்து குடும்பத்துக்குள் அடியெடுத்து வைத்து மருமகன், மருமகள் ஆகட்டும்.. பதவிக்காக அடித்து கொள்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
சரத்பவாருக்கு துரோகம்.. குடும்பத்தையே நிலைக்குலைய செய்த அஜித் பவார்.. யார் இவர்?
இந்திரா
நேரு, இந்திரா காலத்தில் அவ்வளவாக பேசப்படாத, இந்த குடும்ப அரசியல் அதற்கு பிந்தைய கால கட்டங்களில்தான் சந்தி சிரிக்க தொடங்கியது. மிகப்பெரிய ஜாம்பவான்களாக கருதப்பட்ட பெரும்தலைகள் மறைந்த என்டிராமராவ், சரத்பவார் போன்றோரே இளையவர்களான தங்கள் வீட்டு பிள்ளைகள் முன்பு கூனிகுறுகி, மிகப்பெரிய சறுக்கல்களை சந்தித்தவர்கள்தான்.
என்டி ராமாராவ்
உடம்பு சரியில்லை என்று அமெரிக்கா போன என்டி ராமாராவ், திரும்பி வந்து பார்த்தால் ஒரே மாசத்தில் பாஸ்கர்ராவ் சூழ்ச்சிக்கு விழுந்தார்.. தொடர்ந்து சந்திரபாபு வியூகத்தில் கவிழ்ந்தார்! அதிமுகவின் முக்கிய புள்ளியாக இருந்த தாமரை கனியும், அவரது மகனும் கட்சி மோதலால் பிரிந்ததும், சாகிற வரை அப்பாவுடன் பேசமுடியாத நிலையும் அன்று மகனுக்கு ஏற்பட்டதற்கு காரணமும் இதே பதவி வெறிதான்! திமுக தலைவர் முக. ஸ்டாலினையும், அஞ்சா நெஞ்சன் அழகிரியையும் பிரித்து அழகு பார்த்து வருவதும் இதே பதவி அரசியல்தான்!
தேவகவுடா
கர்நாடகத்திலும் கூட தேவெ கெளடாவுக்கும், அவரது மகன் குமாரசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது உண்டு. சில காலம் இருவரும் பேசாமலேயே கூட இருந்துள்ளனர். ஆனால் பின்னர் குடும்பத்தினர் சமரசப்படுத்தியதால் பிரச்சினை தீர்ந்தது. பெரிய அளவுக்கு அது போகவில்லை. கேரளாவில் மறைந்த தலைவர் கருணாகரன், அவரது மகன் முரளீதரன் இடையே கூட பிணக்கு ஏற்பட்டதுண்டு. இருவரும் ஆளுக்கு ஒரு கட்சியிலும் இருந்தவர்கள்தான்.
பிரமோத் மகாஜன்
அவ்வளவு எதற்கு, இந்த குடும்ப அரசியல் கொலை வரையும் நடந்ததை நாடறியும்.. 2006ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நடந்த பிரமோத் மகாஜனின் படுகொலையே அதற்கு சாட்சி.. சொந்த தம்பி பிரவீன் மகாஜனை சுட்டுக் கொன்றார். "உரிய மரியாதை, அங்கீகாரம் கொடுக்க பிரமோத் மகாஜன் தவறியதால் இந்தக் கொலையை செய்தேன் என்று பிரவீன் மகாஜன் வாக்குமூலமே தந்திருந்தார்.
தேசியவாத காங்கிரஸ்
இப்போது அதே மகாராஷ்டிராவில் ஒரு குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது.. நேரடி சண்டை என்றால்கூட பரவாயில்லை.. இது ஒரு முதுகில் குத்திய துரோகமாகவே ஒரு தரப்பினரால் பார்க்கப்படுகிறது.. தேசியவாத காங்கிரஸ் அண்ணன் கையிலா? தம்பி கையிலா? என்ற நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.
பலவீனம்
குடும்ப அரசியல் என்பது பொதுவாக ஒரு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாகாமலேயே போய்விடுகிறார்கள்.. காலங் காலமாக உழைத்தவர்களோ, திடீரென ஓவர் நைட்டில் உருமாறும் வாரிசு தலைவர்களுக்கு அடிமை சேவகம் புரியும் நிலை ஏற்பட்டு வருகிறது. எவ்வளவு சீக்கிரம் பதவிக்கு வருகிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் மக்களின் வெறுப்புகளையும் இவர்களில் ஒருசிலர் எளிதாகவே சம்பாதித்தும் கொள்கிறார்கள்.
முழுமையான அர்ப்பணிப்பு
வாரிசுகளுக்கு தூபம் போடுவது, அல்லது மனசுக்குள்ளேயே குமுறி குமுறி வெடிப்பது என்றுதான் 2-ம் கட்ட தலைவர்களின் நிலை பல மாநிலங்களில் உள்ளது. என்னதான், குடும்ப பலத்தை கொண்டு அரசியலுக்கு வந்துவிட்டாலும், அதை தக்க வைக்க அல்லது, முன்னணியில் திகழ.. உறுதியான கொள்கையும், திடமான ஈடுபாடும், கடினமான உழைப்பும், முழுமையான அர்ப்பணிப்பும், நேர்மையான அணுகுமுறையும்தான் தேவைப்படுகிறது. இதுதான் ஒரு சிறந்த தலைவரையும் உருவாக்கிவிடுகிறது என்பதுதான் காலம் நமக்கு உணர்த்தும் செய்தி