ஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க
தானே: குடும்ப சண்டைகள் எல்லாமே இப்போது கொலையில் முடிகின்றன. தங்கை மகனின் திருமணத்திற்கு போக விடாமல் தடுத்த மனைவியை கொன்று விட்டு போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்த இளைஞர் தன்னை கைது செய்து அழைத்து போகுமாறு கூறியுள்ளார். தானே மாவட்டம் அம்பர்நாத் நகரில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ரூபாலி பாய். 39 வயதான அந்த பெண்ணின் கணவர் பெயர் தீபக் சுக்லால் பாய் என்பதாகும். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். திருமணமான நாளில் இருந்து மாறி மாறி சின்னச் சின்ன விசயத்திற்கெல்லாம் சண்டை போடுவார்கள். பாம்பும் கீரியுமாக இவர்களின் வாழ்க்கை கடந்து போனது.
புதன்கிழமையன்று தீபக் சுக்லாலின் தங்கை மகனுக்கு நடைபெறும் திருமணத்திற்கு அழைப்பு வந்தது. தாய்மாமன் என்ற முறையில் போய் பங்கேற்க ஆசைப்பட்டார் தீபக். ஆனால் அதற்கு ரூபாலி சம்மதிக்கவில்லை. வழக்கம் போல வார்த்தைப் போர் வெடித்தது. வாய் சண்டை கை சண்டையாக மாறியது.
பொறுத்து பொறுத்து பார்த்து கடைசியில் பொறுக்க முடியாத தீபக், தனது மனைவியை அவள் அணிந்திருந்த துப்பட்டாவினால் கழுத்தை இறுக்கினான். வெட்டப்பட்ட செடி போல துடி துடித்து கீழே விழுந்து இறந்து போனாள் ரூபாலி. பக்கத்து அறையில் 2 வயது மகன் படுத்திருக்க, மகளோ பள்ளிக்கு போன நிலையில் இந்த சண்டை நடந்து கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.
16 வயது சிறுமி.. 5 பேர் கொண்ட கும்பல்.. அதிர வைத்த சென்னை வெறியர்கள்
சிவாஜி நகர் போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்த தீபக், தான் தனது மனைவியை கொலை செய்து விட்டதாகவும் தன்னால் தூங்கிக் கொண்டிருக்கும் மகனை விட்டு விட்டு வர முடியாது என்றும் கூறியுள்ளார். தன்னை வந்து கைது செய்து அழைத்துப்போங்கள் என்றும் கூறவே உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது போலீஸ்
ரூபாலியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸ், போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்திய தண்டனைச்சட்டம் 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீபக்கை கைது செய்து அழைத்துச் சென்றனர். இரண்டு குழந்தைகளையும் ரூபாலியின் சகோதரர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாதாரண குடும்ப சண்டை கை சண்டையாக மாறி கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. அந்த பிஞ்சு குழந்தைகளின் நிலைதான் தற்போது பரிதாபகரமான நிலையில் உள்ளது.