ரூ.13,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் பங்களாக்கள் இடிக்கப்படும்: மகாராஷ்டிர அமைச்சர் தகவல்
ரூ.13,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் பங்களாக்கள் இடிக்கப்படும் என மகாராஷ்டிர அமைச்சர் ராம்தாஸ் கதம் கூறியுள்ளார்.
மும்பை: பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்ததில் தொடர்புடைய நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோர் சட்ட விரோதமாக கட்டிய பங்களாக்கள் இடிக்கப்படும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட், அலிபாக் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பங்களாக்களை ஏன் இடிக்கவில்லை என்று மும்பை உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது.
இதைத்தொடர்ந்து, கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பங்களாக்களை இடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிர மாநில அமைச்சர் ராம்தாஸ் கதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராம்தாஸ் கதம் கூறுகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி ஓடிய தொழிலதிபர்கள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி, ஆகியோருக்கு சொந்தமான பங்களாக்கள் உட்பட 172 பங்களாக்கள் இடிக்கப்படும் என்று கூறினார்.
மேலும், அமைச்சர் ராம்தாஸ் கதம் கூறுகையில், சட்டவிரோதமான பங்களாக்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தும் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்படும். அமலாக்கத் துறையினருக்கு தெரிவித்த பின் நீரவ் மோடி, மெகுல் சோக்சி பங்களாக்கள் இடிக்கப்படும் என்று கூறினார்.