கேரள தேசிய விளையாட்டுப் போட்டியில் துயரம்- நெட் பால் வீரர் மாரடைப்பால் மரணம்
திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்து வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் இன்று துயரமான சம்பவம் நடந்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த நெட் பால் வீரர் மயூரேஷ் பவார் என்பவர் போட்டி ஒன்றின் முடிவில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
21 வயதான பவார், மாரடைப்பால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் தேசிய விளையாட்டுப் போட்டி தொடங்கியுள்ளது. இதில் மகாராஷ்டிர நெட்பால் அணியில் இடம் பெற்றிருந்தவர் பவார். இன்று சட்டிஸ்கர் அணியுடன், மகாராஷ்டிர அணி மோதியது. இந்தப் போட்டியின் முடிவில் பவார் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பவார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கடுமையான மாரடைப்பால் பவார் உயிரிழந்துள்ளார். பவாரின் உடலை மகாராஷ்டிராவுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கேரள விளையாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பவார் மறைவால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள வீரர்கள், வீராங்கனைகள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.