மகாராஷ்டிரா ஒன்றும் உங்க அப்பா வீட்டு சொத்து அல்ல: ராஜ் தாக்கரேவுக்கு லாலு மகன் பொளேர்!
பாட்னா: மகாராஷ்டிரா ஒன்றும் உங்கள் அப்பாவின் சொத்து அல்ல என்று மராட்டியர்கள் அல்லாதவர்களின் ஆட்டோக்களை எரிக்க உத்தரவிட்ட மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி பதிலடி கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மராட்டியர்கள் அல்லாதவர்களின் ஆட்டோக்களை எரிக்குமாறு மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தனது கட்சியினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இது குறித்து பீகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மகாராஷ்டிரா ஒன்றும் உங்களின் அப்பாவின் சொத்து அல்ல. இதை ராஜ் தாக்கரே தெரிந்து கொள்ள வேண்டும். ராஜ் தாக்கரே மீது பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பீகார் மக்களுக்கு எதிராக ராஜ் தாக்கரே பேசியது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஆனால் பாஜக அவர் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது என்றார்.
ராஜ் தாக்கரேவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.