பழம்பெரும் பெங்காலி பெண் எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி மரணம் - மோடி, மம்தா இரங்கல்
கொல்கத்தா: பழம்பெரும் பெங்காலி பெண் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவி உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 90.
ஜன்பித், பத்ம விபூஷன் மற்றும் மகசேசே உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகளைப் பெற்றவர் மகாஸ்வேதா. வயோதிகம் காரணமாக நோய்வாய்ப்பட்ட மகாஸ்வேதா, கடந்த இரண்டு மாதங்களாக கொல்கத்தா மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
தன் வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக செலவிட்டவர் மகாஸ்வேதா. இது தொடர்பாக அவர் பல்வேறு நாவல்களையும் எழுதியுள்ளார். அவற்றில் பல சினிமாவாகவும் வெளிவந்துள்ளது.
அவரது படைப்புகளில் முக்கியமானது ஹஜர் சுரசிர் மா, ஆரன்யர் ஆதிக்கர் மற்றும் அக்னிகர்பா போன்றவை ஆகும்.
India has lost a great writer. Bengal has lost a glorious mother. I have lost a personal guide. Mahashweta Di rest in peace
— Mamata Banerjee (@MamataOfficial) July 28, 2016
மகாஸ்வேதாவின் மரணத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், 'இந்தியா மிகச்சிறந்த எழுத்தாளரை இழந்துள்ளது. வங்காளம் புகழ் பெற்ற தாயை இழந்துள்ளது. நான் எனது வழிகாட்டியை இழந்துள்ளேன். மகாஸ்வேதாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இரங்கல்:
இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில் மகாஸ்வேதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Mahashweta Devi wonderfully illustrated the might of the pen. A voice of compassion, equality & justice, she leaves us deeply saddened. RIP.
— Narendra Modi (@narendramodi) July 28, 2016