ஒயின் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படம்... மன்னிப்பு கேட்டது இஸ்ரேல் நிறுவனம்
Recommended Video
டெல்லி: மது பாட்டிலில் மகாத்மா காந்தி படத்தை வெளியிட்ட இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
வெளிநாட்டு பொருட்களில் இந்து கடவுள், இந்திய தலைவர்கள் அவ்வப்போது அவமதிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்தநிலையில், இஸ்ரேலின், 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டைச் சேர்ந்த மல்கா பீர் நிறுவனம், மகாத்மா காந்தியின் படத்துடன் கூடிய, மது வகையை அறிமுகம் செய்துள்ளது. ஒயின் பாட்டிலில் மகாத்மா காந்தி படத்தை அச்சிட்டுள்ளது. அதில் கலர் டிசர்ட், ஓவர் கோட் அணிந்து, கூலிங் கிளாசுடன் இருப்பது போல காந்தியின் படம் உள்ளது.
இந்தப் பிரச்னையை மாநிலங்களவையில் எழுப்பிய, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங், ''இஸ்ரேலை சேர்ந்த மதுபான நிறுவனம், தான் தயாரித்த மது பாட்டில்களில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை பொறித்துள்ளது.
இதன் மூலம் தேசத் தந்தையான அவரை அவமானப்படுத்தி விட்டது. எனவே, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மது பாட்டிலில் உள்ள காந்தியின் உருவப்படத்தை உடனே நீக்கச் செய்ய வேண்டும் என்றார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கருக்கு, துணை குடியரசுத் தலைவர், வெங்கையா நாயுடு கூறினார்.
இது தொடர்பாக, இஸ்ரேல் அரசை இந்திய தூதரகம் அணுகி முறையிட்டது. அதைத் தொடர்ந்து, மல்கா பீர் நிறுவனம், இந்திய அரசிடமும், இந்திய மக்களிடமும் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அதன் மேலாளர் கிளாட் ட்ரார் கூறியுள்ளார். மகாத்மா காந்தியை பெரிதும் மதிப்பதாகவும், அவரது படத்துடன் கூடிய மது பாட்டில்களை, சந்தையில் இருந்து திரும்பப்பெற நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி. எனவே தான், ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இந்தநிலையில், ஆசியாவின் மிகப்பெரிய மதுபானக் கடை, கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஒட்டியுள்ள காந்தி சிலை அருகே அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.