மோடியை தொடர்ந்து ராகுல், மன்மோகனை சந்தித்த ராஜபக்சே.. முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்!
டெல்லி வந்திருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் காங்கிரஸ் ராகுல் காந்தியை சந்தித்தார்.
டெல்லி: டெல்லி வந்திருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் காங்கிரஸ் ராகுல் காந்தியை சந்தித்தார்.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தற்போது இந்தியா வந்துள்ளார். இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக அவர் வந்துள்ளார்.
இந்த பயணத்தில் அவர் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளார். அதன் ஒருகட்டமாக இன்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார்.
ராகுல் காந்தி
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே. டெல்லி வந்திருக்கும் ராஜபக்சே ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலரையும் சந்தித்தார். அதேபோல் இந்த சந்திப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உடன் இருந்தார்.
மோடி
நேற்று பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி சார்பாக ராஜபக்சேவிற்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது சில பாஜக தலைவர்களும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணியன் சாமி நடத்தும் நிகழ்ச்சி
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வர முக்கிய காரணம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிதான். அவர்தான் ராஜபக்சேவிற்கு அழைப்பு விடுத்தது. டெல்லியில் நடக்கும் அவருடைய விழாவிற்கு அழைப்பு விடுத்து இருந்தார். நேற்றுதான் அந்த விழா நடந்தது. நேற்று ராஜபக்சவிற்கு சுப்பிரமணியன் சாமி பெரிய வரவேற்பு கொடுத்தார்.
ஏற்கனவே எதிர்ப்பு
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வந்ததற்கு ஏற்கனவே தமிழர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல் நேற்று பிரதமர் மோடியை ராஜபக்சே சந்தித்ததற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் ராகுல் காந்தியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.