உக்ரைன் வான்வழியை தவிர்க்க ஏர் இந்தியா, பிற நாட்டு விமானங்களுக்கு உத்தரவு
டெல்லி: உக்ரைன் அருகே 295 பயணிகளுடன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் அந்த வான்வழியை பயன்படுத்துவதை ஏர் இந்தியா மற்றும் சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன.
நெதர்லாந்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி 295 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த விமானம் உக்ரேன் அருகே ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 295 பயணிகள் கருகி உயிரிழந்தனர்.
உக்ரைனில் உள்ள ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள்தான் இத்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் உக்ரைன் நாடுதான் இத்தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உக்ரைன் வான்வழியே விமானங்களை இயக்குவதை விமான சேவை நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. இது தொடர்பாக விமான சேவை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன.
அதேபோல் உக்ரைன் வான் எல்லை வழியே பறக்க வேண்டாம் என இந்தியன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமானிகளுக்கு விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இதனை ஏற்று மாற்று வழித்தடத்தில் விமானங்களை இயக்க ஏர் இந்தியாவும் ஜெட் ஏர்வேசும் முடிவு செய்துள்ளன.