மும்பை - கொச்சி விமானத்தைத் தாக்கப் போவதாக மிரட்டல்.. விமான நிலையங்களில் உஷார் நிலை
கொச்சி: மும்பை - கொச்சி இடையிலான விமானத்தைத் தாக்கப் போவதாக அனாமதேய கடிதம் வந்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண வதந்தியாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை, கொச்சி உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் அனைத்துமே உஷார்படுத்தப்பட்டுள்ளன.
கொச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து விமானங்கள், விமான நிலையம், பயணிகளை இவர்கள் சோதனையிடுகிறார்கள்.
மேலும் கலவரத் தடுப்புப் படையினர், ஹைஜாக் தடுப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் இயக்குநருக்கு வந்த அனாமதேய கடிதத்தில், வெள்ளிக்கிழமை விமானமான அகமதாபாத் - கொல்கத்தா மற்றும் சனிக்கிழமை விமானமான கொச்சி - மும்பை விமானத்தை தாக்குவோம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் குறி்த்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.