பஞ்சாப் வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து.. 23 பேர் பலி.. 30 பேர் படுகாயம்.. தீவிர சிகிச்சை
பஞ்சாப் குர்தாஸ்பூர் வெடிமருந்து ஆலையில் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் குர்தாஸ்பூர் வெடிமருந்து ஆலையில் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
பஞ்சாப் குர்தாஸ்பூர் பகுதியில் சிவகாசி போல அடுத்தடுத்து நிறைய வெடிமருந்து உற்பத்தி மையங்கள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணி அளவில் பஞ்சாப் குர்தாஸ்பூர் பகுதியில் உள்ள பெரிய வெடிமருந்து ஆலையில் விபத்து ஏற்பட்டது.
வெடிமருந்து உற்பத்தியின் போது ஏற்பட்ட தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடம் முழுக்க வேகமாக தீ பரவியது. தீ பரவிய சில நிமிடத்தில் கட்டிடத்தின் மேல்கூரை இடிந்து விழுந்தது.
இந்த ஆலையில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் 75க்கும் அதிகமான நபர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழுந்ததால், 50க்கும் அதிகமானோர் இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கு தீ விபத்து ஏற்பட்டு, கட்டிடமும் விழுந்துள்ளதால் மீட்பு பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்திற்கு அடியில் உள்ளவர்களை மீட்பது இதனால் சிரமமாகி உள்ளது.
மீட்பு பணிகளில் தாமதம் ஆவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதுவரை மிக மோசமான காயங்களுடன் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் தீவிரமாக மீட்பு பணியை செய்து வருகிறார்கள்.