லீவு விட்ட விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ்.. வீட்டிலிருந்து வேலை பார்த்த ஊழியர்கள்!
பெங்களூரு: பெங்களூருவில் இன்றும் அசாதாரண நிலை நிலவியதால் முக்கிய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் ஆகிய நிறுவனங்கள் இன்று தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை விட்டிருந்தன. இருப்பினும் முக்கியப் பணிகளில் தொடர்புடையவர்களை மட்டும் வீடுகளிலிருந்து பணியாற்ற பணிக்கப்பட்டனர்.
விப்ரோவின் மெயின் அலுவலகம் இன்று மூடப்பட்டிருந்தது. விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் தவிர பிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களும் கூட இன்று நிறுவனங்களை மூடியிருந்தன. அவற்றின் ஊழியர்களும் வீடுகளிலிருந்து வேலை பார்த்தனர்.
பெங்களுரில் முக்கியமான ஐடி நிறுவனங்கள் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்தான். இவற்றில் மட்டும் கிட்டத்தட்ட 70,000 பேர் பணியாற்றுகிறார்கள். முன்னதாக விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இ மெயில் மூலம் அனுப்பிய தகவலில், கர்நாடக பணியாளர்களுக்கு செப்டம்பர் 13ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் வருகிற 17ம் தேதி சனிக்கிழமை வேலை நாட்களாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
விடுமுறையாக அறிவித்த போதிலும் கூட தனது ஊழியர்களை வீடுகளிலிருந்து வேலை பார்க்க அது பணித்திருந்ததாம். அமேசான், பிளிப்கார்ட் ஆகியவை தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு கேட்டுக் கொண்டிருந்தது. அசாதாரண சூழல் காரணமாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை இன்று எந்த பொருளையும் டெலிவரி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.