மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படை தாக்குதல்- மாவோயிஸ்டுகளுக்கு பெரும் அடி!
மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படை தாக்குதலில் மாவோயிஸ்டுகளுக்கு பெரும் அடி கிடைத்திருக்கிறது.
கட்ச்ரோலி: மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் மட்டுமின்றி கடுமையான பொருளாதார இழப்பையும் சந்தித்துள்ளனர் மாவோயிஸ்டுகள்.
தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒடிஷா, சத்தீஸ்கர் எல்லைகளில் விரிந்து பரந்து கிடக்கும் தண்டகாருண்ய, தண்டேவடா மலைகள்தான் மாவோயிஸ்டுகளின் மாபெரும் கோட்டையாக இருந்து வருகின்றன. நாட்டின் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படையின் முகாம்கள் இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசங்களில் விளைவிக்கப்படும் பீடி இலைகள்தான் மாவோயிஸ்டுகளின் பிரதான பொருளாதார பலம். ஆண்டுக்கு ரூ100 கோடி வரை மாவோயிஸ்டுகளுக்கு வருவாய் தரக் கூடியது இந்த வர்த்தகம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தாங்கள் பலவீனமாகவில்லை என்பதை இந்த வர்த்தகம் மூலம்தான் மாவோயிஸ்டுகள் வெளிப்படுத்தி வந்தனர். அத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினர் மீது தொடர் தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 37 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திராவதி ஆற்றில் அதிகாலையில் குளிக்க சென்ற மாவோயிஸ்டுகளை கூண்டோடு வளைத்து தாக்கியுள்ளது பாதுகாப்புப் படை.
இந்திராவதி ஆற்றில் தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் சடலங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய தாக்குதல் மாவோயிஸ்டுகளுக்கு உயிரிழப்புகளை மட்டும் ஏற்படுத்தவில்லை. இந்திராவதி ஆற்று வனப்பகுதிதான் மாவோயிஸ்டுகளின் பீடி இலை வர்த்தகத்தின் பிரதான சந்தைப் பகுதியும் கூட. இப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஊடுருவி நிலை கொண்டிருப்பது மாவோயிஸ்டுகளுக்கு பொருளாதார அடிப்படையிலும் கடும் பின்னடைவைத் தான் தந்துள்ளது என்றே கூறப்படுகிறது.