2014ல் விளையாட்டு: ஹியூக்ஸ் மரணம்.. சரிதாவின் கண்ணீர்... சிக்கலைச் சந்தித்த 'சூப்பர் கிங்ஸ்'!
சென்னை: கடந்து போக இருக்கின்ற 2014 ஆம் ஆண்டில் முக்கியமான சில விளையாட்டு நிகழ்வுகள் ரசிகர்களை புரட்டியும் போட்டுள்ளன. மகிழ்ச்சிக் கடலிலும் ஆழ்த்தியுள்ளன.
அப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளும், சில துயரமான சம்பவங்களும் இந்த 2014 ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ளது.
கடந்து செல்லும் 204ம் ஆண்டில் நடந்த சில முக்கிய விளையாட்டு உலக நிகழ்வுகள் குறித்த பார்வை...
அதிக வயதில் செஞ்சுரி அடித்த கிரிக்கெட் வீரர்
சர்வதசே கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக வயதில் சதம் அடித்தவர் என்ற சாதனையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கேப்டனான குர்ரம் கான் படைத்தார்.
2014, நவம்பர் 30ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையே துபாயில் நடந்த ஒரு நாள் போட்டியின்போது குர்ரம் கான் சதம் அடித்தார்.
அவரது வயது 43 வருடம் 192 நாட்களாகும். இதன் மூலம் அதிக வயதில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது.
பதக்கத்தினை திருப்பிக் கொடுத்த சரிதா தேவி:
ஆசிய விளையாட்டு குத்துசண்டைப் போட்டியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கிடைத்த வெண்கலப்பதக்கத்தை திருப்பிக் கொடுத்தார் குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி.
நடுவர்களின் தவறான தீர்ப்பால் அவருக்கு வெண்கலப்பதக்கம்தான் வழங்கப்பட்டது. அதனால் பதக்கத்தினை திருப்பி அளித்தார் சரிதா தேவி.
பதக்கத்தை திருப்பி கொடுத்த சரிதா தேவி மீது சர்வதேச குத்துச்சண்டை சங்கம்(ஏ.ஐ.பி.ஏ) ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததுடன், போட்டிகளில் பங்கேற்க தடையும் விதித்தது.
பைசுங் பூதியாவுக்கு புதுப் பெருமை
இந்தியாவின் நட்சத்திர கால்பந்து வீரராகத் திகழ்த பைசுங் பூதியா ஏஎப்சி ஹால் ஆப் பேம் விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய கால்பந்து வீரர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு.
ஏஎப்சி என்பது ஆசிய கால்பந்து சம்மேளனம் ஆகும். பிலிப்பைன்ஸில் நடந்த விருது விழாவில் இந்த விருதினை, சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளாட்டர் பூதியாவுக்கு அளித்துக் கெளரவித்தார்.
பி.வி.சிந்துவுக்கு மக்காவ் பேட்மிண்டன் பட்டம்
மக்காவில் நடந்த மக்காவ் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்ட் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையப் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அவர் கொரியாவின் கிம் ஹியோ மின்-னை 21-12, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சிக்கல்:
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தகுதி நீக்கம் செய்யுமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆலோசனைகூறியது.
நவம்பர் 27ம் தேதி இதுதொடர்பாக அது பிறப்பித்த உத்தரவில், முத்கல் கமிட்டி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தகுதி நீக்கம் செய்யலாம். இதற்குமேலும் காத்திருக்கத் தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தது.
பவுன்சர் பந்து தாக்கி கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம்:
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ், நவம்பர் 25ம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியின்போது பேட் செய்த போது சீ்ன் அப்பாட் என்ற வீரர் வீசிய பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் படுகாயமடைந்து விழுந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலையிலிருந்து மீளாமலேயே நவம்பர் 27ம் தேதி மரணமடைந்தார்.
ஹியூக்ஸின் மரணம் உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி விட்டது.
இஸ்ரேலில் கிரிக்கெட் நடுவர் மரணம்:
இஸ்ரேலில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பில் மரணமடைந்த நான்கு நாட்களுக்குள் நடுவரான ஹில்லஸும் பந்து தாக்கி மரணமடைந்தார்.
இஸ்ரேல் நாட்டில் உள்ள அஸ்டோட் நகரில் தேசிய கிரிக்கெட் லீக் போட்டி நடந்தது. இந்த போட்டி ஒன்றில் 60 வயதான ஹில்லல் ஆஸ்கர் நடுவராக பணியாற்றினார்.
பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரை நோக்கி வந்தது. அதில் இருந்து அவர் தப்பிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. பந்து அவரது தாடையை தாக்கியது. இதில் பலத்த காயத்துடன் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
மீண்டும் சாம்பியன் ஆன மேக்னஸ் கார்ல்சன்:
2014 பைட் செஸ் சாம்பியன் பட்டத்தை நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சன் வென்றார். மேலும் தனது சாம்பியன் பட்டத்தை அவர் தக்க வைத்துக் கொள்ளவும் செய்தார்.
நவம்பர் 23ம் தேதி ரஷ்யாவின் சோச்சி நகரில் நடந்த இந்த செஸ் சாம்பியன் போட்டியில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார் கார்ல்சன்.
ஆரம்பத்திலிருந்து கடுமையான போட்டியை ஆனந்த் ஏற்படுத்தினாலும் கூட சுதாரித்துக் கொண்டு கார்ல்சன் சில சுற்றுக்களில் கையோங்கி விட்டதால் ஆனந்த் தோல்வி அடையை நேரிட்டது.
இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராஜினாமா
இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வந்த டெர்ரி வால்ஷ் ராஜினாமா செய்தார்.
நவம்பர் 18ம் தேதி தனது பதவி விலகலை அவர் அறிவித்தார். அவருக்கும் இந்திய ஹாக்கி அணி நிர்வாகத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களில் உடன்பாடு ஏற்படாததால் விலகுவதாக அறிவித்தார் வால்ஷ்.
ரோஹித் சர்மா புதிய வரலாறு
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்தார்.
நம்பர் 13ம் தேதி கொல்கத்தாவில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது அவர் 264 ரன்களைக் குவித்து இந்த சாதனையைப் படைத்தார். ஒரு நாள் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் இதுதான்.
சாய்னாவுக்குப் புது பயிற்சியாளர்
இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நெஹ்வால், தான் இனிமேல் விமல் குமார் என்ற பயிற்சியாளரின் கீழ் செயல்படவுள்ளதாக அறிவித்தார்.
செப்டம்பர் 1ம் தேதி இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதுவரை முன்னாள் தேசிய சாம்பியன் கோபிசந்த்த்தின் பயிற்சியின் கீழ் விளையாடி வந்தார் சாய்னா. ஆனால் கோபிசந்த்துடனான பயிற்சி உறவை முறித்துக் கொண்ட அவர் விமல்குமார் கீழ் தற்போது பயிற்சி பெறத் தொடங்கியுள்ளார்.
இந்திய அணியின் இயக்குநரானார் ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி ஆகஸ்ட் 19ம் தேதி நியமிக்கப்பட்டார். இங்கிலாந்துக்குப் போயிருந்த இந்திய அணி டெஸ்ட் தொடரில் பெரும் தோல்வியைச் சந்தித்து விமர்சனத்துக்குள்ளானதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடருக்கான இயக்குநராக ரவி சாஸ்திரியை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. தற்போது அவரை உலகக் கோப்பைப் போட்டிக்கும் இயக்குநராக கிரிக்கெட் வாரியம் நீட்டித்துள்ளது.
ஓய்வு பெற்றார் மஹளா ஜெயவர்த்தனே
இலங்கை கிரிக்கெட் வீரர் மஹளா ஜெயவர்த்தனே சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஆகஸ்ட் 18ம்தேதி அவர் விடைபெற்றார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான ஜெயவர்த்தனே, 17 ஆண்டு காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர். அவர் கடைசியாக டெஸ்ட் போட்டியில் எதிர்த்து ஆடிய அணி பாகிஸ்தான். ஜெயவர்த்தனேவின் அந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. மேலும் 2-0 என்ற கணக்கில் தொடரையும் இலங்கை வென்றது.
சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்
அக்டோபர் 4ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த 2014ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் டுவென்டி 20 இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீ்ழ்த்தியது.
சயீத் அஜ்மலுக்குத் தடை
சந்தேகத்துக்குரிய வகையில் பந்து வீசிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலை தொடர்ந்து பந்து வீசுவதற்கு ஐசிசி தடை விதித்தது.
சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், நிர்ணயிக்கப்பட்ட 15 டிகிரி அளவுக்கும் மேலாக கையை வளைத்துப் பந்து வீசியதால், சர்வதேச போட்டிகளில் அவர் பந்து வீசுவதற்கு ஐசிசி தடைவிதித்தது.
செப்டம்பர் 9ம் தேதி இந்த தடை விதிக்கப்பட்டது.
அதி விரைவாக 6000 ரன்களைத் தொட்ட விராத் கோஹ்லி
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 6000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை இந்தியாவின் விராத் கோஹ்லி படைத்தார்.
நவம்பர் 9ம் தேதி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது 53 ரன்களை எடுத்த கோஹ்லி, அப்போட்டியில்தான் இந்தசாதனையைப் படைத்தார்.
அவருக்கு முன்பு மேற்கு இந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்த சாதனையைப் படைத்திருந்தார்.
ரொனால்டோவுக்கு தங்க ஷூ விருது
போர்ச்சுகல் நாட்டு கால்பந்து ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 2013-14ம் ஆண்டுக்கான கோல்டன் பூட் விருதை ஃபிபா அளித்துக் கெளரவித்தது.
நவம்பர் 5ம் தேதி மாட்ரிட்டில் உள்ள மெலியா காஸ்டில்லா ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது
கடந்த சீசனில் ஐரோப்பிய கால்பந்துப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வகையில் இந்த விருது அவருக்குக் கிடைத்தது. அவர் மொத்தம் 31 கோல்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சினுக்கு டான் பிராட்மேன் ஹால் ஆப் பேம் கெளரவம்
முன்னாள் இந்திய கேப்டன் சச்சின் டெண்டுல்கரும், முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் வாக்கும், டான் பிராட்மேன் ஹால் ஆப் பேமில் இடம் பெற்றனர்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 29ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் இருவரின் படமும் இணைக்கப்பட்ட நிகழ்வு நடந்தது.
ஓய்வு பெற்றார் மிரஸ்லோவ் குளோஸ்
உலகப் புகழ் பெற்ற ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் மிரஸ்லோவ் குளோஸ் சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஆகஸ்ட் 11ம் தேதி தனது முடிவை அவர் அறிவித்தார்.
2014ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஜெர்மனி அணி சாம்பின் பட்டத்தை வென்றது. இதில் குளோஸ் முக்கியப் பங்காற்றினார். மேலும் உலகக் கோப்பைப் போட்டிகளில் 15 கோல்களை எடுத்து சாதனை படைத்திருந்த பிரேசில் வீரர் ரொனால்டோவின் சாதனையையும் அவர் இத்தொடரில் முறியடித்தார். உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர் மொத்தம் 16 கோல்களை அடித்துள்ளார்.
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 5வது இடம்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 64 பதக்கங்களுடன் 5வது இடத்தைப் பிடித்தது. ஆகஸ்ட் 3ம் தேதி காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்தன. மொத்தம் 11 நாட்கள் நடந்த இத்தொடரில் 17 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஜூலை 23ம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் 3ம் தேதி தொடர் முடிவடைந்தது.
71 நாடுகளைச் சேர்ந்த 4929 வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொண்டனர். அடுத்த போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும்.
தெலுங்கானாவின் தூதரானார் சானியா மிர்ஸா
இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா, தெலுங்கானா மாநிலத்தின் பிராண்ட் அம்பாசடராக ஜூலை 22ம் தேதி, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவால் அறிவிக்கப்பட்டார்.
தெலுங்கானாவுக்காக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் குரல் கொடுப்பார் சானியா என்றும் ராவ் அறிவித்தார்.
இதுதொடர்பான நியமன உத்தரவையும், ரூ. 1 கோடி நிதியுதவியையும் சானியாவிடம் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அளித்தார் ராவ்.
உலகக் கோப்பைக் கால்பந்து சாம்பியன் ஆனது ஜெர்மனி
பிரேசிலில் நடந்த ஃபிபா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் அது அர்ஜென்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பட்டத்தைப் பெற்றது.
ஜூலை 13ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் விறுவிறுப்பாக இரு அணிகளும் மோதின. இறுதியில், எக்ஸ்ட்ரா டைமில் ஜெர்மனியின் மரியோ கோட்ஸே போட்ட கோலால் ஜெர்மனி சாம்பியன் ஆனது.
இது ஜெர்மனி வென்ற 4வது உலகக் கோப்பையாகும். இதற்கு முன்பு அது 1954, 74 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் வென்றிருந்தது. இருப்பினும் 5 முறை பட்டம் வென்று பிரேசில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
போட்டித் தொடரின் இறுதியில் தங்கப் பந்து விருதை அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, கோல்டன் பூட் விருதை கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், கோல்டன் குளோவ் விருதை ஜெர்மனியன் மானுவல் நியூயர், சிறந்த இளம் வீரர் விருதை பிரான்ஸின் பால் போக்பா ஆகியோர் வென்றனர். ஃபிபா பேர் பிளே விருதை கொலம்பியா வென்றது.
ஐசிசியின் முதல் சேர்மன் ஆனார் என்.சீனிவாசன்
ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் சேர்மன் என்ற பெருமையைப் பெற்றார் இந்தியாவின் என்.சீனிவாசன். ஜூன் 26ம் தேதி ஐசிசியின் முதல் சேர்மனாக நியமிக்கப்பட்டார் சீனிவாசன். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த ஐசிசி வருடாந்திர மாநாட்டில் அவர் சேர்மன் ஆக நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு அவர் சேர்மன் ஆக இருப்பார்.
மேலும் இந்த மாநாட்டில் ஐசிசியின் 11வது தலைவராக வங்கதேசத்தின் முஸ்தபா கமால் நியமிக்கப்பட்டார்.
முரளி கார்த்திக் ஓய்வு
இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் ஜூன் 14ம் தேதி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்தியாவுக்காக 8 டெஸ்ட் போட்டிகள், 37 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் கார்த்திக். 1999ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் இந்திய அணியில் இடம் பெற்று ஆடினார். மேலும், 203 போட்டிகளில் 644 விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார்.
2000மாவது ஆண்டு அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். ஆனால் 2002ம் ஆண்டுதான் அவர் தனது முதல் ஒரு நாள் போட்டியில் ஆடினார்.
கடைசியாக அவர் 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டுவென்டி 20 போட்டியில் இந்தியாவுக்காக ஆடினார்.
ஐபிஎல் போட்டிகளி்ல அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடியுள்ளார். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, புனே வாரியர்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார்.