சபரிமலையில் ஏற்றப்பட்டது மகரஜோதி.. புலிமேட்டில் பக்தர்கள் பரவசம்
சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி ஏற்றப்பட்டது. ஜோதியை புலிமேட்டில் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
சபரிமலைக்கு புல்மேடு பாதை வழியாக சென்றால் தான் செங்குத்தான மலை ஏறாமல் சபரிமலை எளிதாக செல்ல முடியும்.
சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல மொத்தம் மூன்று பாதைகள் உள்ளன.அதில் முக்கியமானது பம்பை - நீலிமலை-அப்பாச்சி மேடு இந்த பாதையையே பெரும்பாலும் மக்கள் பயன்படுத்துவார்கள்.
பெருவழி பாதை
சபரிமலைக்கு செல்ல இன்னொரு பாதை பெருவழிப்பாதை என்று அழைக்கப்படும் அழுதை-கரிமலை பாதை இதில் பல கிலோமீட்டர் காட்டுக்குள் நடந்த வந்து பம்பையை அடைந்து அதன்பிறகு வழக்கம்போல் நீலிமலையில் ஏறி சபரிமலை ஐய்யப்பனை தரிசனம் செய்வார்கள். மேற்கண்ட இரு பாதைகளும் பாரம்பரிய பாதைகள் ஆகும்.
எளிதாக சன்னதி
மூன்றாவது பாதை புல்மேடு பாதை. குமுளியில் இருந்து வண்டிபெரியாறு வழியாக பாண்டித்தாவளம் வழியாக நேரடியாக பம்பை செல்லாமல் சபரிமலை சன்னிதானத்திற்கே செல்ல முடியும். மற்ற இருபாதைகளும் மலையில் ஏறி பார்க்கும் வகையில் சபரிமலை இருக்கும். ஆனால் புல்மேடு பாதை மட்டும் செங்குத்தான இறக்கத்தில் இருக்கும் பாதையாகும். அதாவது புல்மேட்டில் இருந்து நேரடியாக சில கிலோமீட்டர் கீழே இறங்கினால் சபரிமலையை எளிதாக அடைய முடியும்.
பாண்டித்தாவளம்
குமுளியில் இருந்து சத்திரம் வரை வரும் பக்தர்கள் அங்கிருந்து பாண்டித்தாவளம் வனத்துறை செக்போஸ்ட்டை கடந்தால் நேரடியாக சன்னிதானத்தை அடைய முடியும். சத்திரத்தில் பக்தர்களை இறக்கி விடும் வாகனங்கள் நிலக்கல் வந்துவிட வேண்டும். தரிசனம் முடிந்தபின் மலையில் இருந்து கீழிறங்கி பம்பை வந்து நிலக்கல்லில் தங்கள் வாகனங்ளை பக்தர்கள் அடைவார்கள். ஆனால் இந்த பாதையில் யானைகள், புலிகள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு யானைகள் வரவில்லை. புலியும் வரவில்லை.
புல்மேட்டில்
பந்தள ராஜாவிடம் இருந்து கொண்டு வரப்படும் தங்க அங்கிகள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, மாலை 6:25 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்த சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மகரஜோதி மூன்று முறை காட்சியில் இருந்தது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் ஐயப்பனுக்கு மகரசங்கரம பூஜை நடத்தப்பட்டது.
ஜோதி தரிசனத்திற்காக புல்மேட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கட்டடங்கள், மரங்கள் மற்றும் மலை சரிவுகளில் பக்தர்கள் நின்று ஜோதி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 9:00 மணி முதல் வடசேரிக்கரையில் இருந்து பம்பைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.