’மேக் இன் இந்தியா’ திட்டத்தால் ஆயுத கொள்முதலை நிறுத்தியது மத்திய அரசு?
'மேக் இன் இந்தியா’ திட்டத்தால் ஆயுதக் கொள்முதலை இந்திய அரசு நிறுத்தி உள்ளது.
டெல்லி : 'மேக் இன் இந்தியா' திட்டத்தால் இஸ்ரேலியாவுடன் செய்திருந்த ராணுவ ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிடுகிறதாம்.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், பல துறைகளில் 'மேக் இன் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் இந்திய பாதுகாப்புத்துறையின் ஆயுதக் கொள்முதலைக் குறைக்கவும் மேற்கொள்ளப்படவுள்ளதால், இஸ்ரேலிய அரசுடனான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது இந்திய இராணுவ வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாகிஸ்தான் கைவசம் இருக்கும் ஏவுகணைகள் 4 கி.மீ., வரை சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், இந்திய ஏவுகணைத் திறனோ 2 கி.மீ., தான்.
ஸ்பைக் ஏவுகணைகள்
1,600 ஸ்பைக் ஏவுகணைகள் வாங்க மேற்கொள்ளப்பட்டிருந்த பேச்சுவார்த்தை, மேக் இன் இந்தியா திட்டத்தால் கைவிடப்பட்டுள்ளது. அதுபோல ஏவுகணையை இந்தியாவிலேயே வடிவமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்பைக் ஏவுகணைகள் என்பது சிறிய அளவிலான எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஏவுகணைகள். இவை நகரும் வாகனங்களை குறிவைத்து தாக்கப்பயன்படுகின்றன. இந்த வகை ஏவுகணை இஸ்ரேல் பாதுகாப்புத் துறையால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சீன ஏவுகணைகளோடு பாகிஸ்தான்
தற்போது பாகிஸ்தான் படை சீனாவின் ஹெச்.ஜே. 8 என்கிற ஒரு வகை ஏவுகணையைப் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறது. இது இந்தியப்படைகளிடம் இருக்கும் ஏவுகணைகளை விட இரு மடங்கு அதிக தொலைவு சென்று தாக்கக்கூடியது. மேலும், அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன டோ வகை ஏவுகணைகளையும் பயன்படுத்தி வருகிறது.
இந்திய ஏவுகணைத் திறன்
ஆனால், இந்தியப்படைகளிடம் பிரெஞ்-ஜெர்மன் கூட்டுத்தயாரிப்பான மிலன் டூ டி மற்றும் ரஷ்ய தயாரிப்பான 9M113 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் திறன் இரண்டு கிலோமீட்டர் மட்டுமே. இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் உதவியோடு அதே போன்ற அதிநவீன ஏவுகணைகளைத் தயாரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தியாவிலேயே தயாரிப்பு
ஆனால், அதுபோன்ற ஏவுகணை தயாரித்து சோதனைகள் முடிந்து பயன்பாட்டிற்கு வர குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளாவது ஆகி விடும். அதுவரை எதைக்கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தைச் சமாளிப்பது என்று இந்திய வீரர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.