பள்ளிகளில் செக்ஸ் கல்வியை கட்டாயமாக்குக: ஆர்வலர்கள் கோரிக்கை
பெங்களூர்: சிறுமிகளை போன்று சிறுவர்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அபாயம் இருப்பதால் செக்ஸ் கல்வியை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளில் செக்ஸ் கல்வியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 3 ஆயிரம் பெற்றோர் இது குறித்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த மனு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தியிடம் அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து குழந்தைகள் உரிமை ஆர்வலர் குமார் வி. ஜாகிர்தார் கூறுகையில்,
சிறுவர்களும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவர்கள் என்பதை நம்ப நம் சமூகம் மறுக்கிறது. இந்த எண்ணத்தை அரசின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாற்ற வேண்டும். போஸ்கோ சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
5 முதல் 12 வயது வரையிலானவர்கள் தான் அதிக அளவில் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகிறார்கள். நாட்டு மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் மேல் குழந்தைகள் இருப்பதால் அவர்களின் நலனுக்கு என்று தனியாக ஒரு அமைச்சகம் அமைக்க வேண்டும் என்றார்.
பெற்றோர்கள் கையெழுத்திட்டுள்ள கோரிக்கை மனுவில் செக்ஸ் கல்வியை கட்டாயமாக்குவதுடன், சிறுமிகளோடு சேர்த்து சிறுவர்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.