நோபல் பரிசு பெறும் அளவுக்கு மலாலா அப்படி என்னத்த செய்துவிட்டார்?: ஸ்ரீ ஸ்ரீ
மும்பை: பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு அளித்திருக்கக் கூடாது என மத குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் கடும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில் மத குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் லாத்தூருக்கு சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளித்தார்கள். ஆனால் நான் தான் அதை வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் சேவை செய்வதில் தான் மகிழ்ச்சியாக உள்ளேன். அமைதிக்கான நோபல் பரிசு தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். மலாலா யூசப்சாய்க்கு நோபல் பரிசு வழங்கியிருக்கக் கூடாது. அது வீணாகிவிடும்.
நோபல் பரிசு பெறும் அளவுக்கு மலாலா ஒன்றும் செய்யவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி பிரச்சனைக்கு தற்கொலை செய்வதால் எந்த பிரச்சனையும் தீர்ந்துவிடாது. அதனால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
2014ம் ஆண்டு பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.