சமூகத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது... பாலியல் தொல்லைக்கு ஆளான நடிகை வேதனை!
அதிகாலையில் ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான போது உதவி கேட்ட போது ரயிலில் இருந்த யாருமே உதவ முன்வரவில்லை என்று நடிகை சனுஷா வேதனை தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருவனந்தபுரம் : ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான போது உதவிக்காக கூக்குரலிட்ட போது ரயிலில் இருந்த பெண்கள் உள்பட யாருமே உதவிக்கு வரவில்லை என்று நடிகை சனுஷா வேதனை தெரிவித்துள்ளார். இதனால் சமூகத்தின் மீதிருந்த நம்பிக்கையே போய்விட்டதாகவும் சனுஷா தெரிவித்துள்ளார்.
ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சனுஷா, அண்மையில் வெளியான சசிகுமாரின் கொடிவீரன் படத்திலும் சசிகுமாரின் தங்கையாக நடித்துள்ளார். இவர் நேற்று கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாவேலி விரைவு ரயிலில் பயணம் செய்திருக்கிறார்.
தன்னுடைய பெர்த்தில் படுத்திருந்த சனுஷாவிற்கு பக்கத்து பெர்த்தில் படுத்திருந்த 40 வயது ஆண்டோ போஸ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்த சனுஷா உதவிக்காக கூக்குரலிட்டுள்ளார். அதிகாலை 1.10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, அந்த நபரை பிடித்தோடு ரயில் பெட்டியின் விளக்கை போட்டு கத்தியுள்ளார் சனுஷா.
உதவிக்கு வரவில்லை
ஆனால் பெட்டியில் இருந்த பெண்கள் உள்பட யாருமே உதவிக்கு வரவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் சனுஷா. எனினும் இரண்டு பயணிகள் எனக்காக டிடிஆரை தேடிச் சென்று அவரை அழைத்து வந்தனர், அதுவரை அந்த நபரை நான் விடவேயில்லை. பின்னர் ரயில் திருச்சூர் வந்ததும் ரயில்வே காவல்துறையினர் அந்த நபரை கைது செய்துள்ளனர்.
சட்ட ரீதியாக சந்திப்பேன்
எனக்கு நடந்த பாலியல் தொல்லையை எனது குடும்பத்தாருடன் சேர்ந்து சட்ட ரீதியில் சந்திப்பேன் என்று சனுஷா தெரிவித்துள்ளார். எனினும் தனக்கு ஆபத்து என்றதும் உதவி கேட்ட போது பெண்கள் உள்பட யாருமே உதவிக்கு வராதது வேதனை அளிப்பதாக சனுஷா கூறியுள்ளார்.
நம்பிக்கை போய்விட்டது
எங்கோ நடக்கும் சம்பவங்களுக்கெல்லாம் சமூக வலைதளங்களில் வரிந்து கட்டிக் கொண்டு கருத்து போடுபவர்கள், தங்கள் கண் முன்னே நடக்கும் அநியாயத்தை வேடிக்கை பார்ப்பது வேதனையாக இருக்கிறது. சமூகத்தின் மீதிருந்த நம்பிக்கையே போய்விட்டது என்றும் சனுஷா கூறியுள்ளார்.
துணிந்து செயல்படுங்கள்
பெண்கள் தனக்கு பாலியல் தொல்லை நேர்ந்தால் அதற்காக பயப்படாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி பெண்கள் நடவடிக்கை எடுக்கும் போது அவர்களுக்கு உதவும் பொறுப்பு சமூகத்திற்கும் இருக்கிறது, என் விஷயத்தில் அது நடக்காததால் மனமுடைந்துள்ளதாக சனுஷா தெரிவித்துள்ளார்.