சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்த மலையாள பெண் எழுத்தாளர்! மத்திய அரசுக்கு சங்கடம்
திருவனந்தபுரம்: நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து, கொலைகள் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி, மலையாள பெண் எழுத்தாளர் சாரா ஜோசப், தனது சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுத்துள்ளார்.
கர்நாடகாவில் எழுத்தாளர் கல்பர்கி கொலை செய்யப்பட்டது, உத்தர பிரதேசத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முதியவர் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களுக்கு மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்ததுதான் காரணம் என்று குற்றம்சாட்டும் எழுத்தாளர்களில் ஒரு பிரிவினர், தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி கொடுத்து வருகின்றனர்.
நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பேயி, ரகுமான் அபாஸ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பிக்கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள். இதில் தற்போது புது வரவாக சேர்ந்துள்ளார் கேரளாவை சேர்ந்த மலையாள பெண் நாவலாசிரியரும், எழுத்தாளருமான சாரா ஜோசப்.
சாரா ஜோசப், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து கடந்த லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, விருதுகளை திருப்பித்தருவோர், அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படும் எழுத்தாளர்கள் என பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. பீகார் தேர்தல் நெருங்குவதால், பாஜகவுக்கு நெருக்கடி அளிக்க மேற்கொள்ளப்படும் அரசியல் யுக்தி இது என அக்கட்சி கூறுகிறது.
இருப்பினும், எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பித்தருவது மத்திய அரசு மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவருவது உண்மையே.