மாலத்தீவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் இறங்கிய ஈழத்தின் 'பிளாட்'- முறியடித்த இந்தியா- ப்ளாஷ்பேக்
Recommended Video
மாலே: அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு என்பது மாலத்தீவுக்கு புதியது அல்ல. 1988-ம் ஆண்டு தமிழீழ விடுதலை இயக்கங்களில் ஒன்றான பிளாட், மாலத்தீவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டது. அதை அதிரடியாக இந்தியா முறியடித்தது என்பது வரலாறு.
மாலத்தீல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அதிபர் யாமின் ஏற்க மறுத்து வருவதால் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசியல் தலைவர்களை விடுதலை செய்தால் தமது ஆட்சிக்கு ஆபத்து என்பதால் அதை ஏற்க மறுத்து வருகிறார் யாமின். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.
மாலத்தீவில் இதற்கு முன்னரும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் நடந்துள்ளன. 1988-ம் ஆண்டு அதிபராக கையூம் இருந்தார். கையூமின் ஆட்சியை கவிழ்க்க இலங்கையில் இருந்த மாலத்தீவு தொழிலதிபரான அப்துல்லா லுத்தூபி திட்டமிட்டார்.
பிளாட் இயக்கத்தின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
இதற்காகத்தான் பிளாட் எனும் தமிழீழ விடுதலை இயக்கம் பயன்படுத்தப்பட்டது. மாலத்தீவில் ஆட்சியைக் கவிழ்த்தால் அங்கிருந்து பிளாட் இயக்கம் செயல்படலாம் எனவும் சில தீவுகள் அந்த இயக்கத்துக்கு தாரை வார்க்கப்படும் எனவும் உறுதி மொழி தரப்பட்டது.
பிளாட் கட்டுப்பாட்டில் மாலே
இதற்காக மாலத்தீவுக்கு பிளாட் இயக்க உறுப்பினர்கள் படகுகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தலைநகர் மாலேவின் சில பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் பிளாட் இயக்கம் கொண்டு வந்தது.
ஆட்சி கவிழ்ப்பை முறியடித்த இந்தியா
அப்போது இந்தியா, அமெரிக்கா, பிரிட்டனின் உதவியை அதிபர் கையூம் கோரினார். உடனே இந்தியா 1600 ராணுவ வீரர்களை மாலத்தீவுக்கு அனுப்பி பிளாட் இயக்கத்தின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடித்தது.
இலங்கைக்கு நாடு கடத்தல்
இந்த மோதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலரும் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட பலரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். பின்னர் இந்தியாவின் தலையீட்டில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ராவின் ஆட்சி கவிழ்ப்பு நாடகம்?
அந்த காலகட்டத்தில் இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் முகாமிட்டது. அப்போது மாலத்தீவையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் தூண்டுதலால்தான் ஆட்சி கவிழ்ப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.