மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: முஸ்லிம் இளைஞர்கள் 8 பேர் விடுதலை; மும்பை நீதிமன்றம் உத்தரவு
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2006-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 முஸ்லிம் இளைஞர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் உள்ள ஹமிதியா மசூதி அருகே கடந்த 2006 செப்டம்பர் மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக தீவிரவாத எதிர்ப்புப் படையினரால் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ தரப்பிலும் 9 பேர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டு இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வழக்கு மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதில் ஒருவர் வழக்கு விசாரணையின் போதே உயிரிழந்துவிட்டார்.
மாலேகான் குண்டுவெடிப்பில் முதலில் முஸ்லீ்ம்களைத்தான் விசாரணை அமைப்புகள் சந்தேகப்பட்டு வந்தது. ஆனால் 2010ம் ஆண்டுதான் முதல் முறையாக இதில் இந்து தீவிரவாதம் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. அதன் பின்னர் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைதானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.