மலேகான் குண்டுவெடிப்பு: சாத்வி, புரோகித்துக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு ஏஜென்சி எதிர்ப்பு
டெல்லி: மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சாத்வி பிரக்யாசிங் தாகுர் மற்றும் லெப்.கெணல் புரோகித் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தேசிய புலனாய்வு ஏஜென்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி 3 குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் பலியாகினர் .
முதலில் இந்த சம்பவத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு அமைப்பினர், இந்த சம்பவத்துக்கு இந்துத்துவா தீவிரவாதிகளே காரணம் என கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சாத்வி பிரக்யா சிங் தாகுர் மற்றும் லெப். கேணல் புரோகித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீது செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, இருவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வழக்கறிஞர் மரியபுதம் கூறினார். மேலும் இருவரும் கடந்த 6 ஆண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான விசாரணை தாமதமாகிறது என்பதாலேயே ஜாமீன் வழங்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல என்றும் வாதிடப்பட்டது.
அத்துடன் இந்த விசாரணைக்கான தாமதத்துக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி காரணம் அல்ல என்றும் 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வுதான் விசாரணையை தொடங்கியது; பின்னர்தான் தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டது..இதுதான் விசாரணை தாமதத்துக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக இருவரிடமும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டது.