மாலேகான் குண்டுவெடிப்பு: பெண் சாமியார் பிரக்யாவுக்கு தொடர்பில்லையாம்... சொல்கிறது என்.ஐ.ஏ.
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் சாமியார் பிரக்யாவுக்குத் தொடர்பு உள்ளதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி தேசிய புலனாய்வு ஏஜென்சி அவர் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டது. இதனால் இந்த வழக்கிலிருந்து பிரக்யா விடுதலை செய்யப்பட உள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் இரட்டைக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. செப்டம்பர் 29ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. அதேபோல குஜராத் மாநிலம் மடோசா என்ற இடத்தில் அதே நாளில் ஒரு குண்டு வெடித்தது. மாலேகான் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர். குஜராத்தில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் பிக்கு செளக் என்ற இடத்திற்கு அருகே ஒரு ஹோட்டலுக்கு அருகே குண்டு வெடித்தது. ஒரு ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளில் அந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது. குறைந்த திறன் கொண்ட வெடிகுண்டு இது என பின்னர் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கை முதலில் மாலேகான் போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு கையில் எடுத்தது. அதன் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில்தான் அவர் 2008ம் ஆண்டு கடைசியில் மும்பையில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் அபினவ் பாரத் என்ற இந்து அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பெண் சாமியார் சாத்வி பிரக்யா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அன்று முதல் சாத்வி பிரக்யா கடந்த 8 ஆண்டுகாலமாக சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பிரக்யா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி தேசிய புலனாய்வு ஏஜென்சி அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டுள்ளது. இதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிரக்யாவுடையது என்று மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாதம் பலவீனமாக இருப்பதாகவும், அவர் அந்தப் பைக்கை பயன்படுத்தியதே இல்லை என்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
உண்மையில் இந்த பைக்கை பிரக்யா பயன்படுத்தியதே இல்லை. மாறாக ராமச்சந்திர கலசங்கரா என்பவர்தான் பயன்படுத்தி வந்தார். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார் என்று என்ஐஏ கூறுகிறது. அதேபோல் பிரக்யாவுடன் கைது செய்யப்பட்ட கர்னல் புரோகித் மீதான குற்றச்சாட்டையும் கைவிடுவதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
ஆகையால் பிரக்யா, கர்னல் புரோகித் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது.