அட..அதுக்கும் ராகுல் காந்தி சரிப்பட்டு வரமாட்டார்னு அவங்க அம்மாவே சொல்லிட்டாங்க...
டெல்லி: லோக்சபாவில் காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நியமித்து அதிரடி காட்டியிருக்கிறார் சோனியா காந்தி.
லோக்சபா தேர்தலில் முதல் முறையாக வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது காங்கிரஸ் கட்சி. இந்த படுதோல்விக்கு காரணமே ராகுல் காந்தி தலைமையில் தேர்தலை எதிர்கொண்டதுதான் என்பது அக்கட்சியின் மூத்த் தலைவர்களின் கலகக் குரல்.
இப்படி கலகக் குரல் எழுப்பிக் கொண்டிருப்பவர்களை காங்கிரஸ் மேலிடம் சஸ்பென்ட் என்று களை எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் லோக்சபா காங்கிரஸ் கட்சித் தலைவராக யார் நியமிக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.
கமல்நாத் விருப்பம்
லோக்சபாவில் தம்மை கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் வலியுறுத்தி வந்தார்.
ராகுலை நிறுத்துவோம்
அதே நேரத்தில் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக லோக்சபாவில் உட்கார வைத்து மக்களிடம் நல்ல இமேஜை பெறும் வகையில் அவரது செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விரும்பினர்.
எதிர்க்கட்சித் தலைவர்
ஆனால் 44 எம்.பி. இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் ராகுலை வெறும் கட்சித் தலைவராக்குவதா? என்ற குமுறலும் அவரது ஆதரவாளர்களிடத்தில் இருந்தது.
மூத்த தலைவர்கள் நம்பிக்கை..
இருப்பினும் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக ராகுல் இருந்து கட்சியை வழிநடத்தினால் அவர் மீது நம்பிக்கை வரும் என்று மூத்த தலைவர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர்.
சோனியா அதிரடி
இந்த நிலையில்தான் கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கேவை லோக்சபா கட்சித் தலைவராக சோனியா காந்தி பரிந்துரைத்திருக்கிறார். அவரையே காங்கிரஸும் நியமித்திருக்கிறது.
ஆதரவாளர்கள் அதிர்ச்சி
சோனியாவின் இந்த பரிந்துரை ராகுல் காந்தி ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. லோக்சபா கட்சித் தலைவராகவும் இல்லை எனில் வெறும் பத்தோடு பதினொன்று எம்.பி.யாக மட்டுமே இருந்து கண்டு ராகுலால் எப்படி நம்பிக்கையை வளர்த்துவிட முடியும் என்பது ஆதரவாளர்களின் கேள்வி.
பாஜகவுக்கு வாய்ப்பு
சோனியாவின் இந்த முடிவால் பாஜக தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்கெனவே ராகுல் காந்தியை பலவீனமான அனுபவமற்றவர் என்று விமர்சித்து வருகிறது. தற்போது அதை நிரூபிக்கும் வகையில் சோனியாவே ராகுலை லோக்சபா கட்சித் தலைவராக்காமல் விட்டிருப்பது தங்களது பிரசாரத்துக்கு வலு சேர்க்கும் என்கின்றனர் பாஜக தலைவர்கள்.
அட அதுக்கும் ராகுல் சரிப்பட்டு வரமாட்டார்னு அம்மாவே சொல்லிட்டாங்களே!