லோக்சபா காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!
டெல்லி: லோக்சபாவில் காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி, 44 எம்.பி.க்களுடன் லோக்சபாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த எம்.பி.க்கள் குழுவை வழிநடத்தும் கட்சி தலைவராக கர்நாடக மாநிலத்தின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
9-வது முறையாக லோக்சபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத், கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி ஆகியோரின் பெயர்களும் லோக்சபா கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தது. சோனியா அல்லது ராகுல் ஆகியோர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் குல்பர்கா தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ள தலித் தலைவரான கார்கேவை சோனியா காந்தி பரிந்துரை செய்துள்ளார். இத்தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி நேற்று இரவு தெரிவித்தார்.
காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கான போதிய எம்.பி.க்கள் பலம் இல்லாத போதும், கார்கேவுக்கு எதிர்க்கட்சி தலைவர் அங்கீகாரம் கிடைக்குமா? என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.