இன்று இடைக்கால ரயில்வே பட்ஜெட்... கார்கே என்ன தருவார்?
டெல்லி: 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசி ரயில்வே பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இன்று இடைக்கால ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இடைக்கால பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்படுகிறது.
தேர்தல் காலம் என்பதால் மக்களுக்கு அதிக சுமைகளை இன்றைய பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது. மாறாக, பல புதிய ரயில்கள் உள்ளிட்ட மக்களை குஷிப்படுத்தும் அறிவிப்புகள் நிரம்பி வழியும் என்று தெரிகிறது.
நிதி நெருக்கடி- தேர்தல் நெருக்கடி
ரயில்வே துறைக்கு பெரும் நிதி நெருக்கடி உள்ளது. அதேசமயம், லோக்சபா தேர்தல் என்ற மிகப் பெரிய நெருக்கடியும் கூடவே உள்ளது. எனவே இரண்டையும் சமன் செய்யும் வகையிலான பட்ஜெட்டாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் கட்டணம் குறையலாம்
பயணிகள் கட்டணம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நிறைய புதிய ரயில்களுக்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக தெரிகிறது. அதேசமயம், சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
காங்கிரஸுக்கு சவாலான மாநிலங்களில்
அனேகமாக புதிய ரயில்களை, காங்கிரஸ் கட்சி சற்று வீக்காக உள்ள மாநிலங்களில் அதிக அளவில் அறிமுகப்படுத்தலாம் என்று்ம் எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் பாதுகாப்பு - தீத்தடுப்புக் கருவி
ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு, தீவிபத்தைத் தடுக்கும் கருவி உள்ளிட்டவை குறித்த அம்சங்களும், அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகத்திற்கு ஸ்பெஷல் திட்டம் ரெடி...
கார்கே கர்நாடகத்தைச் சேர்ந்தவர். எனவே அந்த அடிப்படையில் அவரது மாநிலத்திற்கு மிகப் பெரிய திட்டம் ஒன்றை கையில் வைத்துள்ளார். அதாவது வாடி - காடக் இடையிலான 252.5 கிலோமீட்டர் தொலைவிலான புதிய ரயில் பாதை குறித்த அறிவிப்பை அவர் இன்று வெ்ளியிடுகிறார்.
தமிழ்நாட்டுக்கு ஏதாவது கிடைக்குமா
தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் நீண்ட காலமாக இழுத்துப் பறித்துக் கொண்டிருக்கின்றன. இந்த பட்ஜெட்டிலாவது தமிழகத்திற்கு ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் வருமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் உள்ளனர்.