4000 இல்லை, 6000 கோடி கடனை திருப்பித் தர்றேன்... விஜய் மல்லையா தகவல்
டெல்லி: செப்டம்பர் மாத கடைசிக்குள் ரூ. 4000 கோடி தருவதாக கூறியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா தான் தொடர்ந்துள்ள ஒரு வழக்கின் மூலம் கிடைக்கும் ரூ. 2000 கோடியையும் வங்கிக் கடனை அடைக்கத் தருவதாக கூறியுள்ளார்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 வங்கிகளிடமிருந்து ரூ. 9091 கோடி வர கடன் வாங்கியுள்ளார் விஜய் மல்லையா. இதை அவர் அடைக்காமல் விட்டதால் வங்கிகள் தற்போது பல்வேறு இடங்களில் முறையிட்டுள்ளன. இதில் சுப்ரீம் கோர்ட்டும் ஒன்று.
தற்போது மல்லையா இந்தியாவில் இல்லை. இங்கிலாந்துக்குப் போய் விட்டார். இந்த நிலையில் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் தொடர்ந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையா தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் வைத்தியநாதன் கூறுகையில், விஜய் மல்லையா வருகிற செப்டம்பர் இறுதிக்குள் ரூ. 4000 கோடியை திருப்பிச் செலுத்தத் தயாராக உள்ளார். அதேபோல இன்னொரு வழக்கில் அவர் வெற்றி பெற்றால் அவருக்கு ரூ. 2000 கோடி கிடைக்கும். அதையும் வங்கிக் கடனுக்குத் திருப்பிச் செலுத்தத் தயாராக உள்ளார் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு வங்கிகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி வழக்கையும் ஏப்ரல் மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரெலிகரே கேபிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பரக் ஜாரிவாலா கூறுகையில், இது ஒரு நல்ல திட்டம்தான். மோசமானது என்று கூற முடியாது என்றார்.
மல்லையா கூறியதை ஏற்றுக் கொள்ளலாமா என்பது குறித்து தற்போது வங்கிகள் கூட்டமைப்பு ஆலோசித்து வருகிறதாம். இதுகுறித்து விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் தெரிவிக்கப்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 13ம் தேதி மல்லையா விடுத்திருந்த ஒரு அறிக்கையில் தான் வாங்கிய கடனில் ரூ. 2494 கோடியை ஏற்கனவே வங்கிகள் திருப்பி வசூலித்து விட்டதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.