அமலாக்கத்துறை கண்ணில் மண்ணைத் தூவி 2 சொத்துக்களை விற்ற விஜய் மல்லையா
பெங்களூர்: அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் முன்பே தொழில் அதிபர் விஜய் மல்லையா கொடகு பகுதியில் தனக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான இரண்டு சொத்துக்களை சப்தமில்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்காத தொழில் அதிபர் விஜய் மல்லையா கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி லண்டனுக்கு தப்பியோடிவிட்டார். இதையடுத்து கடன் கொடுத்த வங்கிகள் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
கடனை திருப்பி செலுத்தாதது, அந்நியச் செலாவணி விதிமீறல் உள்ளிட்டவற்றுக்காக அவரின் 1, 411 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இந்நிலையில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கும் முன்பே கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலும், அதன் அருகிலும் உள்ள 2 சொத்துக்களை அவர் சப்தமில்லாமல் விற்பனை செய்துவிட்டார்.
அந்த இரண்டு சொத்துக்களின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று தெரிய வந்துள்ளது. மல்லையா சொத்துக்களை சப்தமில்லாமல் விற்றதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ள போதிலும் அது பற்றிய விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.
அந்த 2 சொத்துக்களை விற்றதன் மூலம் கிடைத்த பணம் மல்லையாவின் வெளிநாட்டு வங்கி கணக்கு அல்லது வெளிநாட்டில் உள்ள அவரது நிறுவனங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதா என அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.