300 தீவிரவாதிகள் பலியானதாக சொன்னது உண்மையா, பொய்யா.. மமதா பானர்ஜி சரமாரி கேள்வி
விமான படை தாக்குதல் நடந்தது உண்மையா என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
கொல்கத்தா: எல்லாம் இருக்கட்டும்.. முதல்ல பயங்கரவாத முகாம்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையா? 300 தீவிரவாதிகள் இருந்ததாக சொன்னது உண்மையா? என்றெல்லாம் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
40 வீரர்களை கொன்றதால் இந்தியா பதிலடி தர திடீர் தாக்குதலை விடிகாலை 3.30 மணிக்கு நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து இந்த விமான படை தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக 4 தீவிரவாத முகாம்கள் சுக்குநூறாக அழிந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அறிவிப்புகள் வெளியாகின.
இந்த சம்பவம் நடந்து முடிந்து, பதிலுக்கு பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் நுழைய.. அதை நம் நாட்டு தரப்பில் எதிர்கொண்டு அவர்களின் போர் விமானத்தை அழிக்க.. அப்போது நம் விமானி கடத்தப்பட.. இன்று மீண்டும் விடுவிக்கப்படும் அளவுக்கு விவகாரம் சென்றுள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு கேள்வி எழுப்பி உள்ளார்.
[Read more: அடுத்த திருப்பம்.. தடை செய்யப்பட்டது பழமையான ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கம்.. மத்திய அரசு அதிரடி!]
தோள் கொடுக்க தயார்
அதில், தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையா என்றுதான். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது: "புல்வாமா தாக்குதல் நடந்தபோதும் சரி, இந்தியா தரப்பில் அதற்கு பதிலடி தந்தபோதும் சரி, அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் கூட்டவே இல்லை. ஆனால் பாதுகாப்பு படைக்கு ஆதரவாகவும், தோள் கொடுக்கவும் எதிர்கட்சிகள் தயாராகதான் இருக்கின்றன.
உண்மையா? பொய்யா?
பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையா இல்லையா? ஏனென்றால் சர்வதேச ஊடகத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதனால் எது உண்மை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
முன்னெச்சரிக்கை
அரசியல், தேர்தல் காரணங்களுக்காக போர் நடத்தக்கூடாது. உரி மற்றும் பதான்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது பதில் தாக்குதல் நடத்தப்படவில்லை. புல்வாமா தாக்குதல் தொடர்பான தகவல் முன்கூட்டியே கிடைத்தும் ராணுவ வீரர்களை காப்பாற்ற மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை" என்று குற்றம்சாட்டி உள்ளார்.
பிரச்சாரம்
புல்வாமா தாக்குதல் விவகாரத்தை அரசியலாக்கும் மற்றும் பிரச்சாரமாக மாற்றும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளநிலையில், முதலில் தாக்குதல் நடந்ததே உண்மையா என்று மம்தா கேட்டிருப்பது அரசியல் களத்தை சூடாக்கி விட்டுள்ளது.