மமதா பானர்ஜி ஒருநாள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை - தர்ணா செய்வேன் என மமதா அறிவிப்பு
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை எந்தவகையிலும் பிரசாரம் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது,
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதித்ததை எதிர்த்து செவ்வாய்கிழமை தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பிருந்தே அங்கு பல பகுதிகளில் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. அங்கு மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10ஆம் தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன.
ஏப்ரல் 17ஆம் தேதி 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. ஏப்ரல் 22ஆம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவும் ஏப்ரல் 26ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 29ல் 8ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.
ஹூக்ளி பிரச்சார கூட்டத்தில் மம்தா பேசுகையில், ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என எனது சிறுபாதன்மையின சகோதர, சகோதரிகளை கேட்டுக் கொள்கிறேன். பாஜக.,விடம் பணம் பெற்றுக் கொண்ட தீசக்திகளின் பேச்சுக்களைக் கேட்டு சிறுபான்மையின ஓட்டுக்களை பிரித்து விடாதீர்கள். அவர்கள் பல மத வாத வார்த்தைகளை கூறி, மத கலவரத்தை தூண்டி விடுவார்கள். சிறுபான்மையின ஓட்டுக்களை பிரிக்க பாஜக பணத்துடன் அலைகிறது என பேசினார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் - ஏப்.13ல் பதவியேற்பு
நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பு கூச் பிகார் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மமதா பானர்ஜி, முஸ்லீம்கள் அனைவரும் தங்களின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
மமதா பானர்ஜி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தை அணுகிய பாஜக நிர்வாகிகள், முஸ்லிம்களின் வாக்குவங்கியை குறி வைத்து மதரீதியாகவும், பிரிவினை தூண்டும் விதமாகவும் பிரசாரம் செய்தது சரியல்ல எனவும் இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகவும் குற்றஞ்சாட்டினர். மம்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
மமதா பானர்ஜி மதவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்ததாக, தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. தான் பேசியது தொடர்பாக மமதா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மமதா பானர்ஜி, நீங்கள் எனக்கு 10 நோட்டீஸ் அனுப்பினாலும் என்னுடைய பதில் ஒரே மாதிரி தான் இருக்கும். இந்து, முஸ்லிம் ஓட்டு பிரிவினைக்கு எதிராக தான் எப்போதும் பேசுவேன். மத அடிப்படையிலான ஓட்டு பிரிவினைக்கு எதிராக தான் எப்போதும் நிற்பேன் என்று கூறினார்.
இந்தநிலையில் மமதா பானர்ஜி ஒருநாள் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 8 மணி வரை எந்த வகையிலும் மமதா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவினை எதிர்த்து கொல்கத்தா காந்தி மூர்த்தி பகுதியில் ஏப்ரல் 13ஆம் தேதியன்று தேர்தல் ஆணையத்தை எதிர்த்து தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.