சி.ஏ.ஏ. எதிர்ப்பு பேரணிகளை மமதா பானர்ஜி நடத்த மே.வங்க ஆளுநர் கடும் எதிர்ப்பு
கொல்கத்தா: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான பேரணிகளை ஒரு மாநில முதல்வராக பதவி வகித்துக் கொண்டு மமதா பானர்ஜி நடத்தக் கூடாது என்று அம்மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கொல்கத்தா, புருலியாவில் பேரணிகளை நடத்தினார். மத்திய பாஜகவுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் மமதா அழைப்பு விடுத்துள்ளார்.
அதேநேரத்தில் மமதா பானர்ஜியின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஆளுநர் ஜகதீப் தன்கர். இதனால் அவருக்கு எதிராக மாணவர்கள் கறுப்புக் கொடி போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் ஜகதீப் தன்கர், அரசியல் சாசனத்தின் மீது முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட மமதா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த கூடாது. அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமைகளை நான் செய்து வருகிறேன்.
இத்தகைய போராட்டங்களை மமதா பானர்ஜி கைவிட வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட சட்டத்துக்கு எதிராக போராட்டங்களை மாநில முதல்வர் நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றார்.