மக்களவை தேர்தலில் சறுக்கல்.. உறுப்பினர்கள் கட்சி தாவல்.. அதிரடியாக அமைச்சரவையை மாற்றிய மம்தா
Recommended Video
கொல்கத்தா: தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பாஜகவில் சேர்ந்து வரும் நிலையில், மேற்கு வங்க அமைச்சரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.
மேற்குவங்கத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடம் கூட பாஜகவால் ஜெயிக்க முடியாது. மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸின் கோட்டை என்றெல்லாம் திட்டவட்டமாக கூறி வந்தார் மம்தா பானர்ஜி.
ஆனால் வெளிவந்த முடிவுகளை பார்த்து விரக்தியின் உச்சத்திற்கே போய்விட்டார் மம்தா. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள, 42 தொகுதிகளில், 18 தொகுதிகளை வென்ற பாஜக , மம்தாவுக்கு அதிர்ச்சியளித்தது திரிணாமுல் காங்கிரஸ் 22 தெகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால் திரிணாமுல் காங்கிரசின் மாநில நிர்வாகிகள் மீது மமதா பானர்ஜி கடும் அதிருப்தியில் உள்ளார்.
இன்னும் தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சியிலிருந்தே மீளாத மம்தாவிற்கு, அவரது கட்சியை சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் மேற்கொண்டு ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர். அவர்கள் அனைவரும் கூண்டோடு விலகி நேற்று பாஜகவில் ஐக்கியமாகினர்.
இன்னும் பல திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் கட்சியில் சேர தயாராகி வருவதாக பாஜக கூறியுள்ளது. இந்நிலையில் தான் மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் மம்தா அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.
அதன்படி மேற்குவங்க போக்குவரத்து துறை அமைச்சர் சுவென்டுவிற்கு நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள விசாரணை மற்றும் மேம்பாட்டுத் துறை ஆகிய 2 துறைகளை கூடுதலாக வழங்கியுள்ளார். மேலும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜி துறை அமைச்சர் பிரத்யா பாசுவுக்கு கூடுதல் பொறுப்பாக வனத்துறை வழங்கப்பட்டுள்ளது. அதே போல தீயணைப்புத்துறை அமைச்சர் சுஜித் போஸ் அம்மாநில வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மக்கள் தளத்தில் செம டேமேஜான ரஜினியை மலைபோல நம்பும் பாஜக.. அப்ப முடிவு?
சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு, பொது சுகாதார பொறியியல் துறை உள்ளிட்டவை சோமன் மஹாபத்ராவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மலாய் கட்டாக் தற்போது தொழிலாளர் மற்றும் சட்ட துறை கவனிக்க உள்ளதாகவும் மம்தா அறிவித்துள்ளார். பழங்குடியினத்துறை அமைச்சராக ராஜீப் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாங்குரா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் சுபாஷ் சர்க்காரிடம் தோல்வியுற்ற, திரிணாமுல் மூத்த தலைவர் சுப்ரதா முகர்ஜி பஞ்சாயத்து துறை அமைச்சராக இருந்தார். தற்போது அத்துறை வீட்டு வசதி அமைச்சராக உள்ள சண்ட்ரீமா பட்டாச்சார்யாவிடம், கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது போல மேலும் பல துறைகளின் அமைச்சர்களின் இலாகாகளை மாற்றி மம்தா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்