விட மாட்டேன்.. அடுத்து டெல்லிக்கு வருகிறேன்.. தர்ணாவை நிறைவு செய்து மமதா பானர்ஜி ஆவேச உரை
கொல்கத்தா: மத்திய அரசின் சிபிஐ நடவடிக்கைக்கு எதிரான தனது போராட்டம் டெல்லியில் தொடரப்போவதாக அறிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கொல்கத்தாவில் தர்ணாவை ஆரம்பித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று 3வது நாளில் அதை முடித்துக் கொண்டார்.
சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் வந்ததற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கைதுக்கு தடை
இதையடுத்து, சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கிற்கு கொல்கத்தா கமிஷனர் ஒத்துழைப்பு தந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், ஆனால், போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், கமிஷனரை சிபிஐ கைது செய்ய கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
மமதா போராட்டம் வாபஸ்
இதையடுத்து, சிபிஐக்கு எதிராக மமதா பானர்ஜி நடத்திய தர்ணாவை இன்று மாலை முடித்துக்கொண்டார். முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மமதாவை நேரில் சந்தித்து அவரது போராட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கியதோடு, போராட்டத்தை முடித்துக்கொள்ள கோரிக்கைவிடுத்தார்.
மமதா பானர்ஜி உரை
போராட்ட நிறைவின்போது, மமதா பானர்ஜி கூறியதாவது: நாட்டில் இப்போது, ஒரே கட்சி, ஒரே நபர் ஆட்சி போய்க்கொண்டுள்ளது. மத்திய அரசு, அனைத்து ஏஜென்சிகளையும் தனது கைக்குள் போட்டுக்கொள்ள நினைக்கிறது. மாநில அரசின் விசாரணை அமைப்புகளும் இதில் அடங்கும். ஜனநாயகத்தில் அதற்கு இடம் இல்லை. பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு குஜராத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும்.
மோடி உத்தரவு
சிபிஐ மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு களவாடப்பட்ட வழக்கில் சிபிஐ வேகத்தை காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் உத்தரவுகளை ஏற்று சிபிஐ பணியாற்றி வருகிறது. வரும் லோக்சபா தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஹெலிகாப்டர்களை வாடகைக்கு தரக்கூடாது என நெருக்கடி தரப்பட்டு வருகிறது. இரு நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை ஹெலிகாப்டர் நிறுவனங்கள் திருப்பித் தந்துவிட்டன.
டெல்லிக்கு வருகிறேன்
சிபிஐ அடாவடி விவகாரத்தில், உச்சநீதிமன்றம், எங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது அரசியல் சாசனம் மற்றும், ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். எனவே நான் எனது தர்ணாவை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். அடுத்த வாரம் இந்த விவகாரத்தை நான் டெல்லிக்கு நகர்த்த உள்ளேன். இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்து, தர்ணாவை நிறைவு செய்தார்.